பழங்குடி மக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்

மலைவாழ் பழங்குடியின மக்கள் அச்சமின்றி தடுப்பூசியை செலுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா 2 வது தவணை தடுப்பூசியினை செலுத்திக்கொண்டார்

Update: 2021-07-06 16:45 GMT

பழங்குடி மக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் புதூர்நாடு மலை கிராமத்தில் உள்ள வனத்துறை அரசு மேல் நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறையின் சார்பில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் மலைவாழ் பழங்குடியின மக்கள் அச்சமின்றி கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முன்மாதிரியாக பழங்குடியின பொதுமக்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தனது 2 வது தவணை தடுப்பூசியினை செலுத்திக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது

அழகான மலை கிராமமான புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு, மற்றும் நெல்லிவாசல் நாடு ஊராட்சிகளில் உள்ள 32 குக்கிராமங்களில் மொத்தம் 25,950 மக்கள் வாழ்ந்து வருகின்றீர்கள். கொரோனா பெருந்தொற்று கடந்த முதல் அலையில் பாதிப்பின்றி இப்பகுதி பாதுகாக்கப்பட்டது.  தற்போதைய இரண்டாவது அலையில் இப்பகுதியில் பாதிப்புகள் ஏற்பட்டு பொதுமக்களை காத்திட பழங்குடியின மாணவிகள் தங்கும் விடுதியில் கொரோனா சிறப்பு தனிமைப்படுத்தப்படும் மையம் அமைக்கப்பட்டு மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

தற்போது தொற்று குறைந்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் அவர்கள் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை தீவிரப்படுத்தியுள்ளார்கள். அந்த வகையில் நமது மாவட்டத்தில் மலைகிராமங்களிலேயே இப்பகுதியில் தான் குறைந்த அளவு தடுப்பூசியினை பொதுமக்கள் செலுத்தி கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்கள். சுமார் 643 நபர்கள் மட்டும்தான் செலுத்திக்கொண்டுள்ளனர். தகுதியுள்ள 15ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களில் இந்த எண்ணிக்கை மிக மிக குறைவாகும். பொதுமக்களிடம் நிலவும் அச்சத்தை போக்கிடும் வகையில் நானே உங்கள் முன்னிலையில் தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள வந்துள்ளேன்.

கொரோனா தடுப்பூசி குறித்த அச்சம் மக்களுக்கு  தேவையில்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் வராது. ஏதேனும் பிரச்சனை இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனையில் ஆலோசனை பெற்றுக்காண்டு தடுப்பூசியினை போட்டுக்கொள்ள வேண்டும். 18 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயமாக தடுப்பூசியினை போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி மட்டுமே கொரோனா பெருந்தொற்றிலிருந்து ஒவ்வொருவரையும் பாதுகாககும். குடும்பத்தில் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டால் குழந்தைகளை தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

எனவே குடும்பத்தில் 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசியினை போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்  அருகில் உள்ள உறவினர்கள் குடும்பத்தார்களுக்கு எடுத்துச்சொல்லி தடுப்பூசியை போட்டுக்கொள்ள தெரிவிக்க வேண்டும் மேலும் மாற்றுத்திறனாளிகள் கர்ப்பிணிகளும் தயங்காமல் தடுப்பூசியினை போட்டுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார். 

இந்த தடுப்பூசி போடு முகாமில் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவர்கள் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் பழங்குடி மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News