ஏலகிரி ரியல்எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் இரண்டு வருடத்திற்கு பிறகு மேலும் 3 பேர் கைது

ஏலகிரி மலையில் பிறகு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் இரண்டு வருடத்திற்கு மேலும் 3 பேர் கைது

Update: 2021-06-04 13:57 GMT

ஏலகிரி ரியல்எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் இரண்டு வருடத்திற்கு பிறகு கைது செய்யப்பட்டவர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூர் பகுதியை சேர்ந்தவர் அருள் என்கிற அருள்முருகன் (45). இவர் ரியல் எஸ்டேட் அதிபராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அருள் பணத்திற்காக அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது காரில் வந்த மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.

பின்னர் இதுகுறித்து இவரது குடும்பத்தார் ஏலகிரிமலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலமும் அருளின் செல்போன் டவர் மூலமும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் அருள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து செல்போன் டவர் மூலம் போலீசார் கண்காணித்து சம்பவ இடத்திற்கு சென்ற போது அருளை விட்டுவிட்டு மர்ம கும்பல் தப்பிச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட் அதிபர் அருள் என்பவரை போலீசார் மீட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கடத்தப்பட்ட மர்மநபர்களை தேடி வந்த நிலையில் அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை பணத்திற்காக கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து சம்பத் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வந்தனர்.

இந்நிலையில் ஏலகிரி மலையில் உள்ள முத்தனூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக 3 மர்ம நபர்கள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஜெயலட்சுமி சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கருணாமூர்த்தி ( வயது 32), சூளகிரி அடுத்த கரிய சந்திரம் பகுதியை சேர்ந்த சின்னநாயுடு( வயது 27), அதே பகுதியை சேர்ந்த ரூபே ( வயது 24) என்பதும் தெரியவந்தது இவர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் அதிபர் அருள் என்பவரை பணத்திற்காக கடத்திய வழக்கில் ஈடுபட்டது தெரியவந்தது.

போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலதிபர் கடத்திய வழக்கில் 3 பேர் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் ஏலகிரி மலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News