மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கலாம்: கொடநாடு கொலைவழக்கு குறித்து கனிமொழி

கொடநாடு கொலைவழக்கு குறித்து அதிமுகவிற்கு மடியில் கனமிருந்தால் வழியில் பயம் இருக்கலாம் என கனிமொழி எம்பி கூறினார்

Update: 2021-08-19 16:10 GMT

கனிமொழி எம்பி  ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் பிராணவாயு அறையினை திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் 22 எண்ணிக்கை கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் பிராணவாயு அறை திறப்பு விழா இன்று மாவட்ட ஆட்சியர் செந்திராஜ், தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி எம்பி கனிமொழி கலந்து கொண்டு, ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் பிராணவாயு அறையினை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் பேசினார். கொடநாடு கொலை வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு வதாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து கேட்டபோது, திமுக யார் மீதும் காழ்ப்புணர்ச்சியால் பழிவாங்கும் நோக்கத்தோடு நடவடிக்கையை செய்ய வேண்டிய அவசியமில்லை அவர்களுக்கு (அதிமுகவிற்கு) மடியில் கனமிருந்தால் வழியில் பயம் இருக்கலாம் என்றார்.

தொடர்ந்து பேசுகையில்,  தேர்தல் வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்றியது கிடையாது, ஆனால் ஸ்டாலின்  முதலமைச்சர் பொறுப்பேற்ற நாள் தொடங்கி இன்றுவரை தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். ஒரே நாளில் யாராலும் அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாது.

எதிர்க்கட்சியினருக்கு சட்டமன்றத்தில் போதிய கால அவகாசம் கொடுக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது,யார் எதிர்க்கட்சியினராக இருந்தாலும் அவருடைய கருத்துக்களும் கேட்கப்படுகிறது.  சட்டமன்றத்திலும் பேச வாய்ப்பளித்த போது அவர்கள் பேச முடியமால் வெளியே சென்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் பயிற்சி ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாரயணன், இணை இயக்குநர் (நலப்பணிகள்) முருகவேல், விளாத்திக்குளம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மு.மகாலெட்சுமி, சித்த மருத்துவர் மா.தமிழ் அமுதன், குழந்தைகள் நல மருத்துவர் ஆர்.எஸ்.திவ்யா, முக்கிய பிரமுகர்கள் ஜெகன் பெரியசாமி மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News