விளாத்திக்குளத்தில் கருகிய பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருகிய பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-22 16:29 GMT

விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருகிய பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடப்பாண்டு ராபி பருவத்தில் பருவமழை குறைவான அளவே பொய்துள்ளது. இதனால், அந்த பகுதியில் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விவசாயம் செய்யும் விவசாயிகள் உற்பத்தி செலவுக்காக கடன் வாங்கியே விவசாயம் செய்வதால் கடனில் தள்ளாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் மழையில்லாமல் கருகிய பயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா குழு தலைவர் ராமலிங்கம் தலைமையில், விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு கருகிய பயிருடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆர்ப்பாட்டத்தின்போது, பருவ மழை பொய்த்த காரணமாக விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதியில் மிளகாய், கம்பு, சோளம், மக்காசோளம் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் கருகி வரும் நிலையில், கருகும் விவசாய பயிர்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், 2021-22 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகை அனைத்து பிர்காகளுக்கும், அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடு இல்லாமல் வழங்க வேண்டும், விளாத்திகுளம் மற்றும் வேம்பார் உள்ளிட்ட பிர்காக்களுக்கு 2020-21 ஆம் ஆண்டிற்கு மிளகாய் பயிர்களுக்கும், 2021-22 ஆம் ஆண்டு வெங்காயம், உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களுக்கும் பயிர் காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் புவிராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் ஜோதி , விவசாய சங்க தாலுகா செயலாளர் மலைக்கனி, மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ், விவசாய சங்க நிர்வாகி முஜுப்பூர் ரகுமான் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News