எட்டயபுரம் பகுதியில் தொடர் மழை : தரைபாலம் மூழ்கியதால் பொது மக்கள் அவதி

எட்டயபுரம் அருகே ஆர்.வெங்கடேஷ்வரபுரம் பகுதியில் தொடர் மழையால் அப்பகுதியின் தரைப்பாலம் மூழ்கியதால் மக்கள் முடங்கியுள்ளனர்

Update: 2021-10-06 05:09 GMT

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆர்.வெங்கடேஷ்வரபுரம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்திற்கு செல்வதற்கு தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தான் ஊருக்குள் செல்லவோ, வெளியே வரவோ முடியும். இந்த சாலை பகுதியில் உள்ள ஓடையை கடப்பதற்காக ஒரு தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்து விட்டது.மேலும், மழைக்காலங்களில் இந்த ஓடையில் அதிகளவு நீர் வரத்து செல்லும் காலங்களில் பொது மக்கள் ஊருக்குள் செல்லவோ, வெளியேறவோ முடியாத நிலை உள்ளது.

தரைப்பாலத்தில் பதிலாக மேம்பாலம் கட்டிதர வேண்டும் என்று 20 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் தற்பொழுது வரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்நிலையில் கடந்த சில நாள்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவதால் ஆர்.வெங்கடேஷ்புரம் கிராமத்தில் உள்ள ஓடையில் மழை நீர் வரத்து அதிகரித்த காரணத்தால்  தரைப்பாலம் நீரில்  மூழ்கியது. இதனால், கிராம மக்கள்   பாலத்தை கடக்க முடியமால் தவித்து வருகின்றனர்.  அவசர தேவைக்காக வேறு வழியில்லமால் தரைப்பாலத்தில்  ஓடும் நீரில் ஆபத்தையும் பொருள்படுத்தாமல் மறு பகுதிக்கு கடந்து   செல்லும் நிலை உள்ளது.



இரு சக்கர வாகனங்கள் பல மணி நேரம் காத்திருந்து தண்ணீர் மட்டம் குறைந்த  பிறகே செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ள இந்த கிராமத்திற்கு வரும் அரசு பேருந்தும், ஓடை தரைப்பாலத்துக்கு முன்பாகவே பயணிகளை இறக்கிவிட்டு செல்கிறது.  இந்த ஒரு சாலையை தவிர  கிராமத்திற்கு செல்ல வேறு வழி இல்லை என்பதால், பொது மக்கள் கடந்த சில தினங்களாக வெளியே செல்ல முடியாமல் முடங்கிப்போயுள்ளனர். ஓடையின் தரைப்பாலத்தில் எப்போது அதிமான தண்ணீர் வருமோ என்ற அச்சத்துடன்,  இந்த பாலத்தை கடந்து செல்ல  வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் முதியவர்கள், பள்ளி செல்லும் மாணவர்கள், மருத்துவ சிகிச்சை பெற செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாள்களாக  மழை பெய்து வருவதால்  தரைப்பாலத்தில் தண்ணீர் மட்டம்  ஏற்ற இறக்கமுமாக  இருப்பதால்  பொது மக்கள் சிரமம் தொடர்கிறது.இது குறித்து, அந்த கிராமத்தினை சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் உதயக்குமார் கூறுகையில், இந்த தரைப்பாலத்தினை மேம்பாலமாக மாற்ற வேண்டும் என்று 20 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் எவ்வித நடவடிக்கை இல்லை என்றும், ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் தங்கள் மக்கள் அவதிப்படும் நிலை தொடர்கதையாகியுள்ளது.இப்பிரச்னைக்கு மேம்பாலம் அமைப்பது ஒன்றுதான் நிரந்தர தீர்வு. எனவே  மாவட்ட நிர்வாகம் கிராம மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்ற  முன் வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார் அவர்.

Tags:    

Similar News