பாப்கார்னில் கரப்பான் பூச்சி: திருச்செந்தூர் திரையரங்கின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து

திருச்செந்தூர் திரையரங்கில் பாப்கார்னில் கரப்பான் பூச்சி இருந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் உணவு பாதுகாப்பு உரிமத்தை ரத்து செய்தனர்.

Update: 2023-02-18 14:18 GMT

திருச்செந்தூர் திரையரங்கில் வாங்கப்பப்பட்ட பாப்கார்னில் காணப்படும் கரப்பான் பூச்சி.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள ஒரு திரையரங்கில் படம் பார்க்கச் சென்ற மகாதேவி என்பவர் இடைவேளையின்போது அங்குள்ள கேன்டீனில் பாப்கார்ன் வாங்கி உள்ளார். அதில், ஒரு பாப்கார்னில் கரப்பான்பூச்சி உயிருடன் நெழிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளார்.

உடனடியாக இதுதொடர்பாக திரையரங்கு நிர்வாகத்தினரிடமும், கேன்டீன் பணியாளர்களிடம் புகார் தெரிவித்துள்ளர். இருப்பினும், அவர்கள் சரியான பதிலை கூறாமல் இருந்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த மகாதேவி திரைப்படத்தை தொடர்ந்து பார்க்காமல் அங்கிருந்து உடனடியாக வெளியேறி உள்ளார்.

மேலும், மகாதேவி வாங்கிய பாப்கார்னில் கரப்பான் பூச்சி இருந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் திரையரங்கில் விற்கப்படும் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்க்கப்படுவதாகவும், தரமற்ற தின்பண்டங்கள் விற்கப்படுவதாகவும் ரசிகர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகமும், உணவு பாதுகாப்பு துறையும் கேன்டீனை முறையாக பராமரிக்காத திரையரங்க நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரைப்பட ரசிகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேன்டீன் உரிமம் ரத்து: இதற்கிடையே, பாப்கார்னில் கரப்பான்பூச்சி இருந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகனை புகார் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

அதன் அடிப்படையில் பாப்கார்ன் தயாரிக்கப்பட்ட இடத்தில் இருந்து, பூச்சிகள் பாப்கார்ன் பொட்டலத்திற்குள் சென்றதிற்கு நேரடி சாட்சியங்கள் இல்லையென்ற போதிலும், கேன்டீனில் சுகாதாரச் சீர்கேடு நுகர்வோரின் பொது சுகாதார நலனை பாதிக்கும் வகையில் உள்ளது உறுதிபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

எனவே, பொதுமக்களின் பொது சுகாதார நலனை முன்னிறுத்தி, அந்தக் கேன்டீனின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை இடைக்காலமாக தற்காலிக ரத்து செய்ய தீரமானிக்கப்பட்டு, உடனடியாகக் கேன்டீனின் இயக்கம் நிறுத்தப்பட்டதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக புகார்தாரரிடமும், திரையரங்கு நிர்வாகத்திடமும் விரிவான விசாரணை நடத்தி, பாப்காரனில் பூச்சிகள் கிடந்தது குறித்து சான்று ஆவணங்களைத் திரட்டிய பின்னர், வழக்கு பதிவு செய்வது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

புகார் தெரிவிக்கலாம்:

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரையரங்கு கேன்டீனில் சுகாதாரத்தை மேம்படுத்தி, பாதுகாப்பான உணவுப் பொருட்களை உரிய லேபிள் விபரங்களுடன் நுகர்வோருக்கு வழங்கிட சம்பந்தப்பட்ட வணிகர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தவறினால், வணிகத்தை நிறுத்துதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் எச்சரித்துள்ளார்.

திரையரங்குகளில் உள்ள கேன்டீன் சுகாதாரமற்று உள்ளது என்றோ, தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாகவோ நுகர்வோர்கள் சந்தேகித்தால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகத்தின் வாட்ஸ்அப் எண்ணிற்கோ அல்லது கால் யுவர் கலெக்டரின் 86808 00900 என்ற புகார் எண்ணிற்கோ புகார் அளிக்கலாம் என்றும் புகார் தெரிவிப்போர் விபரம் ரகசியம் காக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News