கடலில் தவறவிட்ட நகையை மீட்டு ஒப்படைத்தவர்களுக்கு போலீஸ் எஸ்.பி. பாராட்டு

திருச்செந்தூர் கடலில் பக்தர் தவறவிட்ட 5 சவரன் நகையை மீட்டு ஒப்படைத்த இருவருக்கு போலீஸ் எஸ்பி பாராட்டு தெரிவித்தார்.

Update: 2023-04-06 12:29 GMT

திருச்செந்தூர் கடலில் தவறவிட்ட 5 சவரன் நகையை மீட்டு ஒப்படைத்த தொழிலாளர்கள் இருவருக்கு தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.

திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கும்போது பக்தர் தவறவிட்ட 5 பவுன் தங்க நகையை கடலில் தேடி எடுத்து உரியவர்களிடம் ஒப்படைத்த சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் இருவரின் செயலை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிசு வழங்கினார்.

கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான கார்த்திக் மற்றும் அவரது மகன் ஸ்ரீராம் ஆகியோர் கடந்த 1 ஆம் தேதி திருச்செந்தூர் கோவிலுக்கு வந்திருந்தபோது, அங்கு கடலில் குளிக்கும்போது மேற்படி ஸ்ரீராம் அணிந்திருந்த 5 பவுன் தங்க காப்பு கடலில் விழுந்துள்ளது.

உடனே அங்கு இருந்த திருச்செந்தூர் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளரான திருச்செந்தூர் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்களான சந்திரசேகரன் மகன் சிவராஜா (41) மற்றும் கடல் சிப்பி அரிக்கும் தொழிலாளரான இளங்கோ மகன் மணி பிரசாந்த் (30) ஆகிய இருவரும் மேற்படி ஸ்ரீராமின் கடலில் விழுந்த 5 பவுன் தங்க நகையை 2 நாட்களாக கடலில் தேடி கடந்த 03.04.2023 அன்று கண்டுபிடித்து 04.03.2023 அன்று உரியவரிடம் ஒப்படைத்து உள்ளனர்.

5 பவுன் தங்க நகையை கடலில் தேடி எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த மேற்படி சிவராஜா மற்றும் மணி பிரசாந்த் ஆகிய இருவரையும் இன்று (06.04.2023) நேரில் அழைத்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இருவருக்கும் சால்வை அணிவித்து பாராட்டுச் சான்றிழ் மற்றும் பரிசு வழங்கி கௌரவித்தார்.

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டு செல்லும் இந்த  கால கட்டத்தில் பணத்திற்கு ஆசைப்படாமல் நகையை கண்டு பிடித்து கொடுத்த அந்த இருவருக்கும் சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News