சமூக வலைதளங்களில் வெடிகுண்டு, அரிவாளுடன் வீடியோ: 2 பேர் கைது

தூத்துக்குடியில் அரிவாள், நாட்டு வெடிகுண்டுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-18 14:25 GMT

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட சுரேஷ், அய்யப்ப நயினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அரிவாள், நாட்டு வெடிகுண்டுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டு இருப்பதுபோன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளருக்கு சம்பந்தப்பட்டவர் யார் என்பதை கண்டுபிடித்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

அதன் பேரில் துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், உதவி ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஸ்ரீவைகுண்டம் மார்த்தாண்டநகர், திடல் காலனியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுரேஷ் (23), புதுக்குடியைச் சேர்ந்த முருகபெருமாள் மகன் அய்யப்ப நயினார் (24), ஆகிய இருவரும் தங்களது வாட்ஸ் அப்பில் அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டு இருப்பது போன்ற வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் மற்றும் அய்யப்பநயினார் ஆகிய இருவரையும் கைது செய்தார். சாதி மத ரீதியாக பிரச்சனை ஏற்படும் வகையிலோ அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைக்கும் வகையிலோ புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை சமூக வலைதளங்களில் பரப்பி அச்சுத்தல் ஏற்படுத்துவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News