ஶ்ரீவைகுண்டம் அருகே ஹோட்டல் தொழிலாளி அடித்துக் கொலை

தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுண்டம் அருகே ஹோட்டலில் நடந்த தகராறில் சப்ளையர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-11-03 08:06 GMT

பைல் படம்

தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுண்டம் அருகே ஹோட்டலில் நடந்த தகராறில் சப்ளையர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த ராசு என்பவரது மகன் சேகர் (64). இவர், தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஏரல் பஸ்நிலையத்தில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். அதே ஹோட்டலில், திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியை சேர்ந்த சிவசூரியன் (25) என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் வழக்கமாக வேலை முடிந்ததும் ஹோட்டலிலேயே இரவு நேரத்தில் தங்கிக் கொள்வது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில், சிவசூரியன் நேற்று நள்ளிரவில் மதுபோதையில் ஹோட்டலுக்கு வந்தாராம். இதனால், அவரை சேகர் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவசூரியன் அங்கிருந்த கம்பால் சேகரை தாக்கினாராம்.

சிவசூரியன் தாக்கியதில் படுகாயம் அடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காலையில் மக்கள் நடமாட்டம் அதிகமான பிறகே சேகர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏரல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலையான சேகரின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மதுபோதையில் இருந்த சிவசூரியனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலை குறித்து தஞ்சாவூரில் உள்ள சேகரின் குடும்பத்தாருக்கும் போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். ஏரல் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஏரல் பேருந்து நிலையத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News