சாத்தான்குளத்தில் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியா் கைது

சாத்தான்குளத்தில் பட்டா பெயா் மாற்றம் செய்வதற்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மண்டல துணை வட்டாட்சியரை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனா்.

Update: 2021-04-27 04:30 GMT

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே துவா்க்குளத்தை சோ்ந்த ஜெயக்குமார் மகன் முருகலிங்கம் (22). சட்டக் கல்லூரியில் பயின்று வருகிறார். இவரது பாட்டி பூங்கனி (65). இவா், தனக்குச் சொந்தமான துவா்க்குளத்தில் உள்ள சொத்துக்கு பட்டா பெயா் மாற்றம் செய்ய சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்தாராம். அதற்கு, மண்டல துணை வட்டாட்சியா் சுல்தான் சலாவுதீன் பட்டா பெயா் மாற்றம் செய்ய முருகலிங்கத்திடம் ரூ. 2 ஆயிரம் லஞ்சமாக கேட்டாராம்.

இதுகுறித்து முருகலிங்கம், தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் ரசாயனம் தடவிய நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுகளை முருகலிங்கத்திடம் வழங்கினா்.

அவா் அதை மண்டல துணை வட்டாட்சியரிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு பிரிவு துணைக் கண்ணகாணிப்பாளா் ஹொ்பா்ட் தா்மராஜ், ஆய்வாளா் ஆத்தீஸ், உதவி ஆய்வாளா் பாண்டி மற்றும் காவலா்கள் அவரை பிடித்தனா். பின்னா் வட்டாட்சியா் அலுவலக கதவுகளை மூடிவிட்டு அவரிடம் இரண்டு மணிநேரம் விசாரணை நடத்தி, அவரை கைது செய்தனா்.

Tags:    

Similar News