தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு.. கோரிக்கை மனு மீது உடனடி தீர்வு...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டபோது அளிக்கப்பட்ட மனுக்கு உடனடியாக தீர்வு கண்டார்.

Update: 2023-02-28 16:39 GMT

ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு 2021ஆம் ஆண்டிற்கான ஆண்டுத் தணிக்கை என தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது, துணைஆட்சியர் (பயிற்சி) பிரபு, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் நிஷாந்தினி, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் செல்வக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டிருந்தபோது, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

அப்போது, ஓட்டப்பிடாரம் வட்டம், எப்போதும்வென்றான் குறுவட்டம், ஆதனூர் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராகப் பணிபுரிந்து பணியிடைக்காலமான புனிதராஜ் என்பவரின் மகள் டெய்சி என்பவர் கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற வழங்கப்படும் ஒருங்கிணைந்த சான்றிதழ் வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் மனுவை பரிசீலனை செய்து, உடனடி தீர்வு காணப்பட்டு, டெய்சிக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற வழங்கப்படும் ஒருங்கிணைந்த சான்றிதழை ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.


தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அதிகாரிகளிடம் கூறியதாவது:

தமிழக அரசு செயல்படுத்தி வரும் அரசு நலத்திட்டங்களை பொதுமக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்த்து பயன்பெற செய்யும் துறைகளில் மிகவும் முக்கியமான துறையாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை விளங்கி வருகிறது. மேலும், பொதுமக்கள் எந்த ஒரு சிரமமின்றி மிகவும் எளிதாக பயன்பெறும் வகையில், பொது இ-சேவை மையம் வாயிலாக பல்வேறு சான்றுகள் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, வருமானச் சான்று, சாதிச்சான்று, வாரிசுச் சான்று, விதவைச் சான்று, பட்டா,சிட்டா நகல், இதர வகுப்பினருக்கான சான்று, சொத்து மதிப்பு சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்து மாதந்தோறும் ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.


எனவே, சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

மேலும், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலகம், தேர்தல் பிரிவு, நிலஅளவைப் பிரிவு, வட்ட வழங்கல் பிரிவு மற்றும் ஆதார் சேவை மையம் என அனைத்துப் பிரிவுகளுக்கும் மற்றும் கூட்டரங்கிற்கும் நேரில் சென்று ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். அலுவலகத்தில் பயனற்ற பொருட்களை அப்புறப்படுத்தில் அலுவலகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமாறும் அதிகாரிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், மின்னணு குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த நபர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கிய விவரம் குறித்து கேட்டறிந்த ஆட்சியர் செந்தில்ராஜ், பட்டா மாறுதல் வேண்டி விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்களை மிகவும் கவனமாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுரை வழங்கினார்.

Tags:    

Similar News