திருவாரூரில் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்: ஆட்சியர் துவக்கி வைப்பு

ஆலங்குடியில் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் துவக்கி வைத்தார் .

Update: 2022-04-18 14:30 GMT

ஆலங்குடியில் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரால் கடந்த 2006ம் ஆண்டு தொடங்கப்பட்ட வரும்முன்காப்போம் திட்டம் மீண்டும் தற்போது செயல்பாட்டுக்கு வந்த நிலையில் தமிழகம் முழுவதும் இத்திட்டத்தில் ஏழை எளிய மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகாலமாக முடக்கிவைக்கப்பட்ட வரும்முன் காப்போம் திட்டம் ஏழை எளிய மக்கள் நோய்நொடியின்றி வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தார். இதன்படி இத்திட்டம் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், நாகை பாராளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட மருத்துவதுறை அதிகாரி ஹேமச்சந்த் காந்தி ஆகியோர் இன்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

இத்திட்டத்தின் நோக்கமானது அனைத்து மக்களின் நோய் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளித்து மக்களை பாதுகாப்பது என்ற நோக்கில் இத்திட்டமானது சிறப்பு மருத்துவ முகாம்களாக மாநிலம் முழுவதும் வட்டார அளவில் நடத்தப்படுகிறது. இதில் பொதுமருத்துவம், அறுவைசிகிச்சை மருத்துவர், குடல்நோய் மருத்துவர், குழந்தை மருத்துவர், சித்த மருத்துவர் என 15 சிறப்பு மருத்துவர்கள் இடம்பெற்று நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தேவைப்படும் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் கலைஞரின் வரும்முன்காப்போம் திட்டம் வழிவகுக்கிறது.   

Tags:    

Similar News