மழையால் சாய்ந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

ஜனவரி 1ந்தேதி முதல் மூன்று நாட்கள் பெய்த கனமழையால் மன்னார்குடி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா, தாளடி நெற்பயிர்கள் சாய்ந்ததால் அறுவடை செய்யமுடியாமல் விவசாயிகள் வேதனை .

Update: 2022-01-17 15:09 GMT

சேதம் அடைந்த நெற்பயிர்களுடன் விவசாயிகள்.

காவிரி டெல்டா பாசன மாவட்டங்களின் கடைமடை பகுதி மாவட்டமான திருவாரூர் மாவட்டம் முற்றிலும் விவசாயத்தை நம்பியுள்ள மாவட்டம். இம்மாவட்டத்தில் குறுவையை தொடர்ந்து தாளடி, சம்பா சாகுபடி பணிகள் சுமார் 3.70 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு மேல் மேற்கொள்ளப்பட்டிருந்தன. குறிப்பாக மன்னார்குடியை சுற்றியுள்ள குளசேந்திரபுரம், தென்பரை, பைங்காநாடு உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் சுமார் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

விவசாயிகள் மிகுந்த கஷ்டத்திற்கு இடையே கடன் வாங்கியும், வீட்டில் உள்ள பொருட்களை அடமானம் வைத்தும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து பாடுபட்டு பயிரை ஆளாக்கி அறுவடைக்காக காத்திருந்தனர். இத்தகைய சூழலில் கடந்த டிசம்பர் 30, 31மற்றும் ஜனவரி 1 ஆகிய மூன்று நாட்கள் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நிலத்தில் சாய்ந்ததோடு முளைக்க தொடங்கின.

இத்தகைய பயிர்களை அறுவடை செய்தாலும் நெல்மணிகள் கிடைக்காமல் பதராக அதாவது எதற்கும் தேறாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுதவிர நெற்கதிர்கள் வயல்களிலே சாய்ந்து கிடப்பதால் அறுவடை இயந்திரங்களைக்கொண்டு அறுவடை செய்யமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. நல்ல செழிப்புடன் நெற்கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராகி இருப்பதை கண்ணால் கண்டு மகிழ்ச்சியுடன் இருந்த விவசாயிகளுக்கு இயற்கையின் தொடர் இடர்பாட்டால் கண்ணுக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலையில் விவசாயிகள் மன வேதனைக்கு உள்ளாகி செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

உடனடியாக மாவட்டஆட்சியர் வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக ஆய்வு செய்து .விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.  அதைபோல் அரசின் நிவாரணம் என்ற ஆதரவு பார்வை பட்டால் மட்டுமே மன்னார்குடியையொட்டிய சுற்றுபுற கிராம விவசாயிகளை ஓரளாவாவது பாதுகாக்கலாம் என்பதோடு, எதிர்காலத்தில் விவசாயத்தில் ஒருபிடிப்பினை ஏற்படுத்த முடியும் என விவசாயிகள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்

Tags:    

Similar News