குப்பை நகரமாகவே மாறிய தேனி: நகராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் அதிருப்தி
தேனி நகராட்சியில் குப்பைகளை அகற்றக்கூட கலெக்டர் முரளீதரன் ஆய்வு செய்து, உத்தரவு வழங்க வேண்டிய இக்கட்டான நிலை உள்ளது.;
கலெக்டர் கண்டித்த பின்னர் அல்லிநகரம் கருமாரியம்மன் கோயில் தெருவில் குப்பைகள் அகற்றப்படுகின்றன.
தேனி நகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் நியமனத்தில் பெரும் அளவில் முறைகேடுகள் நடைபெற்றன. முன்பிருந்த நகராட்சி கமிஷனர் இந்த முறைகேடுகளை கண்டறிந்து பெரிய அளவில் நடவடிக்கை எடுத்தார். அவர் மாறிச் சென்ற பின்னர் தற்போது வேறு கமிஷனர் வந்துள்ளார். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை கடந்த ஆறு மாதங்களாகவே தேனி நகராட்சி குப்பை நகரமாகவே மாறி விட்டது. நகராட்சியின் குப்பை மேலாண்மை மிக, மிக மோசமாக உள்ளது. எங்கு திரும்பினாலும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. துர்நாற்றம் வீசுகிறது.
வீடுகளிலும் முறையாக குப்பைகளை வாங்குவதில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர்.மாவட்ட தலைநகரான தேனியில் இந்த அவல நிலையா? என கலெக்டர் முரளீதரன் நகரை சுற்றி வந்து ஆய்வு செய்தார். அவர் சென்ற இடங்கள் எல்லாமே குப்பை குவியல்களாகவே இருந்தன. கலெக்டர் கடுமையாக கண்டித்த பின்னர் ஓரிரு இடங்களில் குப்பைகளை அகற்றி வருகின்றனர். இதுவும் ஓரிரு நாள் மட்டும் நடக்கும். அடுத்து பழைய சூழ்நிலை திரும்பி விடும். குப்பை அகற்றக்கூட கலெக்டர் உத்தரவிட வேண்டிய அவசியம் உள்ளது. அந்த அளவு நகராட்சி நிர்வாகம் சீர்கேடு அடைந்து உள்ளது என பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.