விண்ணைத்தொடும் விலை உயர்வு: ஓசையின்றி நடைபெறுகிறதா மதமாற்றம்..?

தமிழகத்தில் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் மதமாற்றம் செய்ய முயற்சிகள் நடப்பதாக இந்து எழுச்சி முன்னணி புகார் எழுப்பி உள்ளது.

Update: 2023-02-11 08:45 GMT

பைல் படம்

இது குறித்து தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி தலைவர் ராமராஜ் மத்திய அரசிற்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழக பெருநகரங்களில் ஒரு மாபெரும் நாகரீக வீழ்ச்சி அல்லது ஆபத்து உருவாகியிருப்பது கண்கூடாக தெரிகின்றது. இதுபற்றிய விழிப்பு மக்களிடம் இல்லை என்பது தான் வேதனை.

தமிழகத்தில் நிலத்தின் விலை விண்ணில் இருக்கின்றது. அதை தாண்டியும் செல்கின்றது. நியூயார்க் நகரத்து முக்கிய சாலையின் ஒரு சென்ட் நிலமதிப்புக்கு உரிய விலை, மனசாட்சியே இல்லாமல் தமிழக பனங்காட்டுக்கு நடுவில் ஓணானே வரதயங்கும் முள்காட்டுக்கு சொல்லபடுகின்றது. ஆனால் பெருகிவிட்ட மக்கள் தொகையில் மக்களுக்கு வழியும் தெரியவில்லை. இது இன்று பெரும் வியாபாரமாக இருந்தாலும் எதிர்காலத்தில் ஆபத்து, வீடுகட்ட நிலம் தேடி அலையும் அபலையான எதிர்கால சந்ததி உருவாகும், ஒரு வீடு என்பது மிக மிக பெரிய கனவாய் முடியும், வீடு என்பது அமையாமலே போகும்.

உணவுக்கு அடிப்படை விலை உள்ளது போல அத்திவாசியமான உடைக்கும் வீட்டுக்கும் உச்சவிலை நிர்ணயிக்கபட வேண்டும். ஆனால் தமிழகத்தில் அரிசி விலை கூடினால் ஆர்ப்பாட்டம், சீனிவிலை கூடினால் ஆர்பாட்டம் என்பார்கள் அதே நேரம் உடையும் வீட்டுமனையும் விலை கூடினால் சத்தமே இருக்காது. ஒரு வினோத மனநிலை இது. தமிழக அரசு நிலவிலை தொடர்பாக சட்டம் ஏதும் இயற்றியதாக தெரியவில்லை. நிலங்கள் பொதுநோக்கு தவறி மாபெரும் கொள்ளை விலைக்கு விற்கபடுகின்றது. மக்களின் வாழ்வும் போராட்டமும் சில சென்ட் நிலத்துக்கு எனும் அளவில் முடங்கிப்போனது.

இது ஒருவகையில் நாட்டின் பொருளாதாரத்தை அசைக்கும் விஷயம். ஒரு சென்ட் நிலம் பல லட்சம் என யாரிடமோ முடங்கும்பொழுது அங்கு வரி இல்லை, பணம் முடங்கிவிடும். இதனால் அரசுக்கு வரவேண்டிய வருமானமும் பொருளாதார முடக்கமும் ஏற்படும். ஒவ்வொருவரும் இப்படி நிலத்தில் வெளிதெரியாமல் பெரிய விலையில் சிக்கிக்கொண்டால் பொருளாதாரம் நிச்சயம் ஓய்ந்து விடும். நில விவகாரத்தில் மாபெரும் கட்டுபாடும் விலை நிர்ணயமும் அவசியம் இல்லாமல் போனால் எதிர்காலத்தில் அதுவும் உலகின் முதல் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்குபொழுது தேசத்தின் மிகபெரிய பிரச்னையாக இது உருவெடுக்கும். அவசரமாக செய்ய வேண்டிய விஷயம் இது.

இப்பொழுதெல்லம் வேகமாக புறநகர்கள் உருவாகின்றன. விளை நிலம் வீணான நிலமெல்லம் கற்களிட்டு வேலியிட்டு பிளாட் பிளாட்டாக விற்கப்படுகின்றன. இவ்வாறு விற்கப்படும் சூழலில் பல்வேறு மதங்களும் உள்ளே புகுந்து பெரும் ஆபத்தான சூழல்களை உருவாக்கி வருகின்றன.

தமிழக அரசு இதில் கவனம் செலுத்த தயக்கம் காட்டி வருகிறது. எனவே மத்திய அரசாவது இதில் கவனம் செலுத்தி, நிலங்களின் விலையை கட்டுப்படுத்தவும், பிற மதத்தவர்கள் கைப்பற்றி அவர்களின் வழிபாட்டு தலங்களின் எண்ணிக்கையினை கிடுகிடுவென அதிகரித்து வருவதையும் தடுக்க வேண்டும். இப்படி புதிதாக உருவாகும் ரியல் எஸ்டேட் பிளாட்களில் மாற்று மத வழிபாட்டு தலங்களை அதிகப்படுத்தி,அங்கு குடியேறும் மககளை மதமாற்றம் செய்ய முயற்சிக்கின்றனர். இதற்காக பல்வேறு நுட்பங்களை கையாண்டு வருகின்றனர். இவ்வாறு  அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News