13 ஆண்டாக தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் மகாராஷ்டிராவில் கைது
தேனி போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்து 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த மாவோயிஸ்ட் மீண்டும் கைது செய்யப்பட்டார்.;
தேனி மாவட்டத்தில் வருஷநாடு மலைப்பகுதியில் பதுங்கியிருந்த போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்த மாவோயிஸ்ட் யோகேஷ்மதன், 13 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் 2007ம் ஆண்டு வருஷநாடு மலைப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. முடிவில் 5 மாவோயிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் யோகேஸ்மதன், 34 ஒருவர். இவர் சிறையில் அடைக்கப்பட்டு 2009ம் ஆண்டு வெளியே ஜாமீனில் வெளியே வந்தார்.
அப்போதே மீண்டும் தலைமறைவானார். இவரை போலீசார் 13 ஆண்டுகளாக தேடி வந்தனர். இந்நிலையில் யோகேஸ்மதன் மகாராஷ்டிரா மாநிலத்தில் கச்சர்ஒலி மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சென்னை கியூ பிரிவு போலீசார் மகாராஷ்டிரா சென்று அவரை கைது செய்தனர்.
இன்று (டிசம்பர் 5ம் தேதி) இரவு யோகேஷ்மதன் தேனி கியூ பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். யோகேஷ்மதன் 2011ம் ஆண்டில் இருந்தே வாரண்டில் தேடப்பட்டு வந்தவர் என்பதால் அவரை இன்றே கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.