உத்தமபாளையம் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லுாரியில் பன்னாட்டு இணைய வழி கருத்தரங்கம் நடைபெற்றது.;
உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் தமிழ்த்துறை, பிரான்சு முத்தமிழ்ச் சங்கம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம் நடைபெற்றது.
உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, தமிழ்த்துறை, பிரான்சு முத்தமிழ்ச் சங்கம், தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து "பாவேந்தரின் கவிதைக்களமும் கருத்துப் புலப்பாடும்" எனும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை இணைய வழியில் நடத்தியது.
கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கின் தொடக்க விழாவிற்குக் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஹாஜி ஹெச். முகமது மீரான் தலைமை வகித்தார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தேனி மு. சுப்பிரமணி முன்னிலை வகித்தார். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ. முருகன் வரவேற்புரை வழங்கினார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் சு.சி. பொன்முடி, துணைச்செயலாளர் இரா. முருகேசன், உதவிப்பேராசிரியர் முனைவர் மு.அப்துல்காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் பிரான்சு முத்தமிழ்ச் சங்கம் இடையில் கல்வி மற்றும் கலை, இலக்கியம், பண்பாடு, ஆராய்ச்சி சார் பரிமாற்றங்கள் மேம்பாட்டுப் பணிகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தப் செய்து கொண்டதற்கான ஆவணங்களைக் கல்லூரியின் சார்பில் முதல்வர் முனைவர் ஹாஜி ஹெச். முகமது மீரான், பிரான்சு முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எழுத்தாளர் ந. முத்துவிஜயன் ஆகியோர் பரிமாற்றம் செய்து கொண்டனர். பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தர மதிப்பீட்டுக் குழு வழங்கும் உச்சபட்ச தரநிலையான ஏ++ நிலையினைப் பெற்றதற்கு நிர்வாகத்திற்கும், முதல்வருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர், இணைய வழியில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வில் பாரதிதாசன் பேரன் கவிஞர் கோ.செல்வம் வாழ்த்துக் கவிதை வாசித்தார். அதனைத் தொடர்ந்து, கடலூரிலிருந்து முதுமுனைவர் புலவர் கதிர் முத்தையனார், "பாவேந்தரின் பைந்தமிழ் முழக்கம்" எனும் தலைப்பிலும், பிரான்சிலிருந்து இசைக்கலைஞர் சம்பத் எதுவார், "பாவேந்தரின் இசைத்தமிழ் இன்பம்", புலவர் பொன்னரசு, "பாவேந்தரின் கண்ணகிக் காப்பியம் (கவிதை)" , அப்துல் தயூப். "பாவேந்தரின் வீர முழக்கம்", வழக்குரைஞர் ஐ. குணசேகரன், "பாவேந்தரின் பகுத்தறிவுப் புரட்சி" எனும் தலைப்புகளிலும், புதுச்சேரியிலிருந்து முனைவர் அ. லட்சுமி தத்தை, "மனித உரிமைகளுக்கான பாவேந்தரின் குரல்" எனும் தலைப்பிலும் கருத்துரைகளை வழங்கினர். இணைய வழியில் நடைபெற்ற இக்கருத்தரங்க நிகழ்வினை முனைவர் தி.நெடுஞ்செழியன் நெறியாளுகை செய்து ஒருங்கிணைத்தார்.
இந்தியா, இலங்கை, மலேசியா, பிரான்சு நாடுகளிலிருந்து பலரும் பங்கேற்றனர். இந்நிகழ்வு கல்லூரியில் திரைக்காட்சியாகக் காண்பிக்கப்பட்டது. முடிவில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் எம்.பிலால் நன்றி கூறினார்.