கூடலூரில் மழையில் நனைந்த நெல்மூட்டைகள்: விவசாயிகள் போராட்டம்

கூடலூரில் 20 டன் நெல் மூடைகள் மழையில் நனைந்ததை கண்டித்து விவசாயிகள் ரோட்டில் நெல்லை கொட்டி போராட்டம் நடத்தினர்.

Update: 2022-04-25 03:17 GMT

கூடலுாரில் நெல் மூடையினை தேசிய நெடுஞ்சாலையில் கொட்டி விவசாயிகள் போாட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம், கூடலூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய விவசாயிகள் அறுவடை செய்திருந்த 20 டன் நெல் மூடைகளை கொண்டு வந்து குவித்து வைத்திருந்தனர். இயந்திர பற்றாக்குறை காரணமாக அதிகாரிகள் அந்த நெல்லை கொள்முதல் செய்வதற்கு மிகுந்த தாமதம் செய்து வந்தனர்.

இந்நிலையில் நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த விவசாயிகளின் நெல், மழையில் நனைந்து சேதமாகியது. அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கும், அலட்சியமும் தான் இதற்கு காரணம் என அதிகாரிகளை கண்டித்து கூடலுார் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன், செயலாளர் தெய்வம், பாரதிய கிஷான் சங்க மாவட்ட தலைவர் சதீஷ்பாபு, இயற்கை வேளாண் விவசாய சங்க தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நெல்லை கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நெல் கொள்முதலில் தாமதம் செய்வதால் விவசாயிகள் அறுவடை செய்த நெல் சேதத்திற்கு உள்ளாகி உள்ளது. விவசாயிகள் விளைந்த நெல்லையும் அறுவடை செய்ய முடியாமல் பரிதவித்து வருகின்றனர். வயல்களிலும் விளைந்த நெல் வீணாகிறது என புகார் எழுப்பினர்.

சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, நெல் கொள்முதலுக்கு விரைவான வசதிகள் செய்வதாக உறுதி அளித்தனர்.

Tags:    

Similar News