பட்டினியிலும் துப்புரவுப் பணி; சொந்த பணத்தில் பசியாறவைத்த தேனி கலெக்டர்

வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்தபோது அங்கு வேலை பார்த்த துப்புரவு பணியாளர்களுக்கு தேனி கலெக்டர் சொந்த செலவில் உணவு வாங்கி கொடுத்தார்.

Update: 2021-08-06 04:00 GMT

துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வாங்கிக்கொடுக்கும் தேனி ஆட்சியர்.

தேனி மாவட்ட மலைக்கிராமங்களில் வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்யச் சென்ற ஆட்சியர் முரளிதரன், அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த துப்புரவு பணியாளர்களுக்கு சொந்த செலவில் உணவு வாங்கி கொடுத்தார்.

தேனி கலெக்டர் முரளிதரன் க.மயிலாடும்பாறை ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுாத்து கிராமத்திற்கு ஆய்வுக்கு சென்றார். அங்கு வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்தபோது, துாய்மைக் காவலர்கள் ஆறு பேர் வேலை செய்துகொண்டிருந்தனர்.

அவர்களை அழைத்து விசாரித்த கலெக்டர், அவர்கள் உணவு சாப்பிடாமல் வேலை செய்வதை தெரிந்து கொண்டார். உடனே பக்கத்தில் இருந்த ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அவர்கள் அத்தனை பேருக்கும் தேவையான உணவுகளை வாங்கி கொடுத்தார்.

சாப்பிட்டு முடிக்கும் வரை உடன் இருந்த ஆட்சியர், அவர்கள் சாப்பிட்டதற்கான தொகையை தனது சொந்த பணத்தில் வழங்கினார். அவர்கள் கொடுத்த கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதையடுத்து, ஆத்தங்கரைப்பட்டி கிராம ஊராட்சிக்கு சென்றார். அங்கும் துாய்மைக்காவலர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு கலெக்டர் தனது சொந்த செலவில் டீ, வடை  வாங்கிக் கொடுத்தார். அவர்களுடன் சேர்ந்து தானும் டீ வடை சாப்பிட்டார். உடன் வந்த அதிகாரிகளையும் சாப்பிட அறிவுறுத்தினார். இங்கும் அதற்கான தொகையை ஆட்சியரே சொந்த செலவில் வழங்கினார்.

தற்போது கொரோனாவின் தாக்கம் நிலவி வரும் சூழ்நிலையில் தூய்மையும் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அவ்வாறு, முன்களப் பணியாளர்களாகவே பட்டினி என்றும் பாராமல் தங்களது கடமைகளை சீர்மிகு செய்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காலை உணவு சாப்பிடாமல் தூய்மை பணியாளர்கள் வேலை செய்வதை அறிந்த மாவட்ட ஆட்சியர், உடனே உணவு வாங்கிக்கொடுத்து தன் பணத்தை செலவழித்தது அதிகாரிகள் மற்றும் மக்களிடையே நெகிழ வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News