காவிரி நீர் பிரச்னைக்கு கடிதம் எழுதினால் போதுமா?
காவிரி நீர்பிரச்சனை குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் கடிதம் கொடுத்துள்ளோம் என்று துரைமுருகன் சொல்லி வருகிறார்;
பைல் படம்
காவிரி நீர்பிரச்சனை குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் கடிதம் கொடுத்துள்ளோம் என்று அமைச்சர் துரைமுருகன் சொல்லி வருகிறார்.
இப்படிக் கடிதம் 50 ஆண்டுகளாக கொடுப்பதனால் என்ன பலன் கிடைக்கப் போகிறது? கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை என்றால் என்ன செய்யலாம்? ஒன்று, மறுபடியும் உச்சநீதிமன்றத்தை அணுகி காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தைக் கூட்டி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிடவேண்டும் என்று கேட்க வேண்டும்.
இல்லையென்றால் இன்றைக்கு திமுகவின் தோழமைக் கட்சியான காங்கிரஸ் தான் கர்நாடகத்தில் ஆளுகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், “கேரள முதலமைச்சரும், கர்நாடக அரசும், நாங்களும் திராவிட கொள்கையின்படி ஒருமித்த போக்கில் ஒன்றுபட்டு இருக்கின்றோம். சகோதர பாசத்தோடு பழகுகிறோம்” என்று சொல்கிறார்.
அப்படி இருக்கும்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய அருமைச் சகோதரர் ராகுல்காந்தி மூலம், திராவிட பெருவழியில் இப்படி ஒரு சிக்கல் இருக்கக்கூடாது. கர்நாடகாவின் காங்கிரஸ் அரசு எங்களுடைய தோழமைக் கட்சி என்பதால் உடனே காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சொல்லலாமே.
அதேபோன்று முல்லைப் பெரியாறிலும் உங்களது சகோதரர் பினராய் விஜயன் தான் இருக்கிறார். அவரிடமும் பேசலாமே. இதை விட்டுவிட்டு மத்திய அரசிடம் செல்கிறோம் என்று கூறினால், மறுபடியும் இந்தப் பிரச்னை தீர்க்கப்படுவதாக தெரியவில்லை. மேலும் கால தாமதமாகலாம்.
மத்தியில் காங்கிரஸ் ஆண்டாலும் பாஜகா ஆண்டாலும் காவிரி பிரச்னையில் என்ன நினைக்கின்றது என்றால், கர்நாடகத்தில் நம்முடைய மாநில அரசு அமைகின்றது. காங்கிரசோ பாஜகவோ தமிழ்நாட்டில் ஆட்சி அமையாது. அப்படிப்பட்ட நிலையில் காவிரியில் தண்ணீர் திறந்து விடுங்கள் என்று காங்கிரசோ, பாஜகவோ சொன்னால் கர்நாடக மக்களிடம் ஏன் கெட்ட பெயர் அமைய வேண்டும்? நமது ஆட்சி அங்கே அமைந்துள்ளது என்று நினைப்பார்கள்.
இதுதான் அங்கே டெல்லியில் உள்ள மத்திய அரசில் உள்ளவர்களின் எண்ணம். எது சாத்தியமோ, எது எதார்த்தமோ அந்த வழியில் போகாமல் மறுபடியும் மறுபடியும் மத்திய அரசிடம் சொல்கிறோம் என்றால் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்தது தான் நடக்கும். டெல்டா மக்களுக்கு வர வேண்டிய தண்ணீர் வரப்போவதில்லை. 50 ஆண்டுகளாக இதே நிலைமைதான்.
எது சாத்தியமோ, விரைவாக தீர்வு எட்டப்படுமோ அதை நாம் கவனிக்க வேண்டுமா இல்லையா? உங்களுடைய தோழமைக் கட்சி தானே காங்கிரஸ், அதனிடம் பேசலாமே... காங்கிரஸ் இடம் பேசுங்கள்... ராகுல் காந்தியிடம் பேசுங்கள்... சோனியா காந்தியிடம் பேசுங்கள்... அதேபோல் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் பேசுங்கள்... அதை விட்டுவிட்டு நாங்கள் மத்திய அரசிடம் கடிதம் கொடுத்துள்ளோம் என்றால் அது எப்படி நடைமுறைப்படுத்தப்படும்?
நன்றி: கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அரசியலாளர்.