சிவகங்கையில் மாவட்ட நிர்வாகம்-அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாம்

சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி துவக்கி வைத்தார்

Update: 2022-08-27 08:45 GMT

மாவட்ட நிர்வாகம் மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாமை தொடக்கி வைத்து பார்வையிட்ட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து, அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோர்களுக்கென நடத்திய சிறப்பு மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன்ரெட்டி, துவக்கி வைத்து பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களின் சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் வண்ணம், இலவச மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் போன்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி பொதுமக்களின் நலன் காத்து வருகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி, அனைத்து நகர் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு, பொதுமக்களின் மருத்துவத் தேவைகளை அவர்கள் வசிக்கின்ற பகுதிகளிலேயே கிடைக்கப்பெறும் செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோர்கள் தங்களது பணியின் காரணமாக, சரிவர தங்களது உடல்நலத்தினை பேணிக்காப்பதில் கவனம் செலுத்துவதில்லை. இதனை கருத்தில் கொண்டு, சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்றைய தினம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

இச்சிறப்பு முகாமில், இருதயம் தொடர்பாக இ.சி.ஜி. மற்றும் எக்கோ பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை பரிசோதனை, மகப்பேறு பரிசோதனை, எலும்பு மற்றும் நரம்பியல் தொடர்பாக பரிசோதனை, கண் மற்றும் பல் பரிசோதனை, இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பளவு, யூரியா மற்றும் கிரியாடின் அளவு சிறுநீர் முழு பரிசோதனை உள்ளிட்ட இரத்த முழுப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பரிசோதனைக்கு பின் ,திறமைமிக்க மருத்துவர்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டு, மேல்சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுபோன்று, அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலன் கருதி நடைபெறுகின்ற மருத்துவ முகாம்களில் அனைவரும் கலந்து கொண்டு, தங்களின் உடல் நலத்தினை பேணிக்காத்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.

இம்முகாமில், இணை இயக்குநர் (மருத்துவம்) மரு.இளங்கோமகேஸ்வரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.ரத்தினவேல், துணை இயக்குநர்கள் மரு.ச.ராம்கணேஷ் (சுகாதாரப்பணிகள்), மரு.ராஜசேகரன் (காசநோய்), அப்போலோ மருத்துவமனை நிர்வாகி செல்வகுமாரி லாவண்யா (நிர்வாகம்), மருத்துவ கண்காணிப்பாளர் மரு.கோகுலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News