தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் முடி திருத்தும் தொழிலாளர்கள் போராட்டம்

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் முடி திருத்தும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2024-03-12 18:09 GMT

தாயமங்கலம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட முடிந்திருத்தும் தொழிலாளர்கள்.

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் முடி திருத்தும் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோயில் நுழைவுத் பகுதியில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

இளையான்குடி அருகேயுள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் உரிமம் பெற்ற முடி திருத்தும் ஊழியர்களுக்கு கோயில் நிர்வாகம் வழங்க வேண்டிய பங்குத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், அரசு அறிவித்த ஊக்கத் தொகையை வழங்க வேண்டும், முடி திருத்தும் ஊழியர்களுக்கு மாதம் முழுவதும் பணி செய்ய அனுமதி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ தமிழ்நாடு மருத்துவர் சமுதாய பேரவை சார்பில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் முடி திருத்தும் ஊழியர்கள் உள்பட சிஐடியூ சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இப் போராட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டத் தலைவர் வீரையா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சேதுராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் ராஜு, உள்ளாட்சி ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் முருகானந்தம், பொது தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வேங்கைய்யா, மருத்துவர் சமுதாயப் பேரவை நிர்வாகிகள் சுப்பிரமணியன், அழகர்சாமி, கண்ணன், கருப்புசாமி உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். இளையான்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் பேசி கோரிக்கைகள் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் என, போராட்டக் குழுவினரிடம் தெரிவித்தனர்.

அதன்பின், போராட்டத்தை கைவிட்டு போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மீண்டும் போராட்டத்தை தொடர்வோம் என முடி திருத்தும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News