10% கமிஷன் கொடுத்தால்தான் வேலை; மேற்பார்வையாளர்-ஒப்பந்ததார் ஆடியோ பரபரப்பு

ஊராட்சி ஒன்றிய மேற்பார்வையாளர் 10% கமிஷன் கொடுத்தால் தான் வேலை என ஒப்பந்ததாரரிடம் பேசும் ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-08-07 09:44 GMT

பைல் படம்.

அரசு பணிகளில் ஒப்பந்தம் எடுக்கும் வேலைகளுக்கு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு கமிஷன் பேசி வேலை எடுத்து பார்ப்பது அனைத்து இடங்களிலும் எழுதப்படாத சட்டமாக நடைமுறையில் இப்போதும் உள்ளது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா கண்ணங்குடி ஒன்றியத்தில் ரமேஷ், இளங்கோ ஆகியோர் ஒப்பந்ததார்களாக உள்ளனர். இவர்கள் கண்ணங்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் வேலைகள் எடுத்து முடித்து பல மாதங்களாகியும் இறுதி தொகை வரவில்லை.

இது குறித்து ஒன்றிய அலுவலக மேற்பார்வையாளராக உள்ள முத்துமாணிக்கத்திடம் ஒப்பந்ததாரர்கள் போனில் கேட்டபோது, அவர் வேலை முடிந்த பில்களை அப்ரூவல் செய்ய 10 % சதவீதம் வரை மேலே இருப்பவர்கள் எதிர்பார்க்கிறார்கள் டீலிங் உறுதியானால் கிடைத்திடும் என கூறுகிறார்.

அதற்கு மறு முனையில் பேசும் ஒப்பந்ததாரர் ரமேஷ், ஏற்கனவே வேலை முடித்து பல மாதங்கள் ஆகிவிட்டது. 74 லட்சத்திற்கு 10 % என்றால் என்ன செய்வது வட்டியை கணக்கிட்டால் என்ன செய்வது என்று கூறுகிறார். இந்த ஆடியோ பேச்சு தற்போது வைரலாக பரவ ஆரம்பித்துள்ளது.

அரசு ஒப்பந்த பணிகளில் வெளிப்படை தன்மையுடன் நேர்மையாக நடைபெற வேண்டும் என தமிழக முதல்வர் கூறினாலும், லஞ்சம் கொடுத்தால் தான் வேலையே நடக்கும். ஏன்னென்றால், இதில் எல்லோருக்கும் பங்கு செல்கிறது என ஒன்றிய மேற்பார்வையாளர் கூறுவது லஞ்சம் அனைத்து துறைகளிலும் புரையோடி உள்ளது என்பதையே இந்த ஆடியோ காட்டுகிறது.

இப்படி நடக்கும் ஒப்பந்தகளால் பணிகள் சரியானதாக இருக்குமா? அப்படி செய்தாலும் இதில் பாதிக்கப்படுவது மக்கள் தானே. மக்களுக்காகத்தான் அரசு செயல்படுகிறது; அரசு ஊழியர்களும் செயல்படுகிறார்கள் என்பதை அனைவரும் உணர்ந்தால் இதுபோன்ற தவறுகள் நடக்குமா? மக்களுக்கும் திட்டங்கள் சரியானதாக சென்று சேரும்.

Tags:    

Similar News