பூட்டிய வீட்டிற்குள் டிவி, கம்ப்யூட்டர் எரிந்து சேதம்: பெரும் விபத்து தவிர்ப்பு

தேவகோட்டை அருகே பூட்டிய வீட்டிற்குள் திடீரென கரும்புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-22 13:59 GMT

கருப்புகை வெளியேறிய வீட்டில் தீயணைப்புத்துறையினர்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே ஆறாவயல் பேங்க் வீதியில் வசித்து வருபவர் பழனியப்பன். இவர் குடும்பத்துடன் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார்.

கடந்த வாரம் ஆறாவயலில் உள்ள தனது பூர்வீக வீட்டிற்கு குடும்பத்துடன் வந்தவர், நான்கு நாட்களுக்கு முன் தான் கோயம்புத்தூருக்கு திரும்பி சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று பூர்வீக வீட்டின் ஜன்னலில் இருந்து கரும்புகை வந்துள்ளது. பின்புறம் வாடகை வீட்டில் வசித்து வரும் மனோகரன் உடனடியாக ஆறாவயல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர் தேவகோட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வீடு பூட்டியிருந்ததால் வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அதிக மின் அழுத்தம் காரணமாக டிவி தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அருகிலிருந்த கம்ப்யூட்டரும் எரிந்து நாசமாகி உள்ளது.

தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால், அப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.  இச்சம்பவம் குறித்து ஆறாவயல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News