இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்ற 2 வயது சிறுவன்: அமைச்சர் பாராட்டு
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற உலக புத்தகத்தில் இடம்பெற்ற 2 வயது சிறுவனை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பாராட்டினார்.;
பொதுஅறிவு வினாக்களுக்கு பதிலளித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற உலக புத்தகத்தில் இடம் பெற்ற சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த 2 வயது சிறுவனை ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பாராட்டினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆனந்தகுமார், பிரின்ஸி பிரேமராணி இவர்களது மகன் கெவின்ரித்திக் (2). மழலை மொழி பேச்சு மாறும் முன்னே நாடுகள், விலங்குகள், பொதுஅறிவு விடையளித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் நடத்திய 2 வயது சிறுவர்களுக்கான பொது அறிவு போட்டியில் பங்கேற்றார்.
அதில் 9 நிறங்கள், 5 பழங்கள், 6 காய்கறிகள், 6 போக்குவரத்து வாகனங்கள், 5 சமூக உதவியாளர்கள், 5 கணினி பாகங்கள், 5 சுதந்திர போராட்ட வீரர்கள், 11 மனித பாகங்கள், 6 விலங்குகள், 10 தேசிய சின்னங்கள், 26 ஆங்கில எழுத்துகள் போன்றவற்றை மனப்பாடமாக சொல்லுதல், ஆங்கிலம் மற்றும் தமிழில் 72 பெயர்களை கண்டறியும் திறனாய்வு, 5 விலங்குகளின் குரல் எழுப்புதல், 6 முகப்பாவனைகள் செய்து காட்டினார்.
இதன்மூலம் அவர் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளார். அவருக்கு அந்நிறுவனம் பதக்கம், சான்றிதழ் வழங்கியது. அச்சிறுவனை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பாராட்டினார்.