சேலம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.;
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம்.
சேலம் கிழக்கு போக்குவரத்து வட்டார கழக அலுவலகத்தில் புதிய வாகனம், தகுதி சான்று, ஓட்டுநர் உரிமம், பழைய வாகனம் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் நரேந்திரன், ரவிக்குமார் மற்றும் 10க்கும் மேற்பட்ட காவல் துறையினர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக கதவை பூட்டி உள்ளே சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் வாகனம் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இடைத்தரகர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு பணிகளை செய்து வந்தது தெரிய வந்தது.
வட்டார போக்கு அலுவலர் ஜெயகௌரி மற்றும் இடைத்தரகர்கள் சங்கர் உள்ளிட்ட 7 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் இதில் கணக்கில் வராத 60 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.