சேலத்தில் ரயிலை கவிழ்க்க முயற்சி- பரபரப்பு : இருவரை 5 மணி நேரத்தில் பிடித்த போலீசார்

சேலத்தில் ரயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது - இதுதொடர்பாக இருவரை 5 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் பிடித்தனர்.

Update: 2021-07-05 01:11 GMT

சேலம் கந்தம்பட்டி பகுதியில் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் இரும்பு பிளேட்டை வைத்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

சேலத்தில் இருந்து பாளையம் நோக்கி இன்று அதிகாலையில், சரக்கு  ரயில் ஒன்று  சென்றுக் கொண்டிருந்தது.  இந்த ரயிலை கவிழ்க்கும் நோக்கில்,  கந்தம்பட்டி பகுதியில் தண்டவாளத்தில் இரும்பு பிளேட்டை மர்ம நபர்கள் சிலர்  வைத்துள்ளனர்.

இதை பார்த்து சுதாரித்து கொண்ட ரயில் ஓட்டுநர் கோபிநாத், ரயிலை நிறுத்தினார். இது குறித்து சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்தனர்.

ரயில்வே டிஎஸ்பி குணசேகரன் மேற்பார்வையில், ஆய்வாளர் சிவகாமிராணி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ரயிலை கவிழ்க்க முயன்ற திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த செல்வகணபதி மற்றும் கந்தம்பட்டி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் சற்று முன்பு கைது செய்தனர். அவர்களை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சம்பவம் நடந்த 5 மணி நேரத்தில் இருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தொடர்ந்து விசாரணை நடக்கிறது. 

Tags:    

Similar News