சேலம் மாவட்டத்தில் மீண்டும் தொடங்கியது தடுப்பூசி முகாம்

சேலம் மாவட்டத்தில், 8 நாட்களுக்கு பிறகு இன்று தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

Update: 2021-07-12 03:32 GMT

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை  தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 138 மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. கடந்த 3 ஆம் தேதி 138 மையங்கள் மூலம் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்து 8 நாட்களாக மாவட்டம் முழுவதும் உள்ள தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், சென்னையில் இருந்து சேலத்திற்கு தடுப்பூசி வந்ததையடுத்து, இன்று மாவட்டம் முழுவதும் 138 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இன்றைய தினம் 22,640 பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 8 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி முகாம் நடைபெறுவதால் அதிகாலை 4 மணி முதலே தடுப்பூசி போட ஆர்வத்துடன் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கே தடுப்பூசி போடப்படுவதால் பெரும்பாலானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 8 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி முகாம் நடந்தாலும் கோவீசீல்டு மட்டுமே போடப்படுகிறது,  கோவாக்சின் தடுப்பூசி போடப்படவில்லை. இதனால் ஏற்கனவே முதல் தவணையாக கோவாக்சின் போட்டுக்கொண்டவர்கள் உரிய தேதியில் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News