ஆவின் ஊழியர் நியமனத்தில் கடந்த ஆட்சியில் முறைகேடு: பால்வளத்துறை அமைச்சர் நாசர்

ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

Update: 2021-07-04 05:00 GMT

சேலத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பால் வளத்துறை அமைச்சர் நாசர்.

தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர், சேலம் ஆவின் பால் பண்ணையில் இன்று ஆய்வு மேற்கொண்டார். பால் பண்ணை வளாகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி பிரிவு, கிடங்குகள் ஆகியவற்றை நேரில் சென்று சென்று பார்வையிட்டார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் நாசர் அளித்த பேட்டி: கடந்த ஆட்சியில், ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. குறிப்பாக 234 பேர்  முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து விசாரணை நடத்தி, பணி நீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும், 634 முதுநிலை மற்றும் இளநிலை  ஆலை பணியாளர்களை நியமிக்க,  முறைகேடாக பணம் பெற்றுள்ளதாக வந்த தகவலை அடுத்து, அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணியிடங்களுக்கு புதிதாக பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பால் உற்பத்தி மற்றும்  விற்பனை, 1.50 லட்சம் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 நிலையங்கள் உள்பட விலைகுறைப்புக்கு பின்பும்,  பழைய விலைக்கே பால் விற்பனை செய்த நிலையங்களுக்கு சீல் வைக்கப்ப்டுள்ளது. பால் விலை குறைப்பால் அரசுக்கும் 270 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 25 பால் ஒன்றியங்களிலும் முறைகேடு நடந்துள்ளது; முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம். முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் வீட்டிற்கு தீபாவளி நேரத்தில் ஒன்றரை டன் அளவுக்கு ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரம் உள்ளது. நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News