பெத்த மனம் பித்து... பிள்ளை மனம் கல்லு! 95 வயது தாயை கழிப்பறையில் தங்க வைத்த மகன்

சேலத்தில், 95 வயது தாயை கழிப்பறையில் தங்க வைத்து குடீநீர் கூட தராத மகனின் செயல், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தொண்டு அமைப்பினர், மூதாட்டியை மீட்டனர்.

Update: 2021-06-07 04:56 GMT

சேலம் அருகே உள்ள டால்மியா போர்டு பகுதியை சேர்ந்தவர் ராதா என்ற 95 வயது மூதாட்டி. இவரது கணவர் தலைமை காவலராக இருந்து ஓய்வு பெற்று , பல ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவருக்கு 4 மகன்கள். அவர்களில் இருவர் காலமாகிவிட்டனர். கடைசி மகனான ஸ்ரீதர் என்பவரின் வீட்டில், தாய் ராதா வசித்து வந்துள்ளார். ஸ்ரீதர், டால்மியா போர்டில் பணிபுரிந்து வந்துள்ளார். மூதாட்டிக்கு அரசின் சார்பில் ஓய்வூதியத் தொகையும் வந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. 

ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், இதனால் சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தினர் அனைவரும்,  தனியார் மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை ஸ்ரீதர் வசித்து வந்த வீட்டின் பின்புற பகுதியில் இருந்து மூதாட்டி ஒருவரின் அழுகுரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தனர். அப்போது, வீட்டின் கழிவறையில் மூதாட்டி ராதா, உணவின்றி, குடிநீர் இன்றி தவித்து வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள், மூதாட்டி ராதாவின் மகன்களை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர்.

அப்போது, அவர்கள் தனது தாய் இறந்தால் மாநகராட்சிக்கு தெரிவித்து விடுங்கள். அவர்கள் வந்து எடுத்து செல்லட்டும் என்று அலட்சியமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதி மக்கள், இதுபற்றி மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்தனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சேலத்தில் ஆதரவற்ற முதியோர் இல்லம் நடத்தி வரும் போதி மரம் என்ற தனியார் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் நிர்வாகிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கழிவறை அருகே  மிகச்சிறிய இடத்தில் உணவு, குடிநீரின்றி ஆபத்தான நிலையில் இருந்து வந்த மூதாட்டியை மீட்டு, முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்று, முதலுதவி அளித்து வருகின்றனர்.

பெற்ற தாயை கழிவறைக்கு அருகே விட்டுச்சென்றவர்களின் மனசாட்சி இல்லாத செயல் வருத்தம் அளிப்பதாக, அப்பகுதியினர் தெரிவித்தனர். கொரோனா போன்ற கொடுந்தொற்று வந்து, உயிரிழப்புகள் நடந்து வந்தாலும் கூட, அதில் பாடம் கற்காமல், மனிதாபிமானமற்ற இதுபோன்ற செயல்களில் சிலர் ஈடுபடுவது, உண்மையில் வருத்தமான ஒன்றுதான். 

Tags:    

Similar News