தர்மபுரியில் ரூ.10,000 கோடியில் மெகா ஜவுளி பூங்கா: அமைச்சர் காந்தி

தர்மபுரியில், ரூ. 10,000 கோடியில் மெகா ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என, அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-20 06:30 GMT

சேலத்தில் காதி கிராப்ட் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஆகியவற்றை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் துறை உயர் அதிகாரிகளுடன், இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காந்தி, கொரோனாவால் விற்பனை குறைந்த கோ-ஆப்டெக்சில், தீபாவளிக்கு முன்னதாக விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு அடுத்து நெசவாளர்களுக்கே அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், ஆண்டுக்கு 365 நாளும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் நெசவாளர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பட்டு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதற்கு மாநில அரசு காரணமல்ல, மத்திய அரசு தான் காரணம் என்றார்.

தர்மபுரியில் 10 ஆயிரம் கோடியில் 1000 ஏக்கர் பரப்பளவில் மெகா ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் காந்தி, இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார். மேலும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் போலி நெசவாளர் சங்கங்களின் பட்டியல் எடுக்கப்பட்டு அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Tags:    

Similar News