சமூக நலத்துறை நிலுவை திட்டங்களை செயல்படுத்த ரூ 3 ஆயிரம் கோடி தேவை: அமைச்சர் கீதாஜீவன்

கடந்த ஆட்சியில் சமூக நலத்துறை சார்பில் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்த தொகை ரூ 3 ஆயிரம் கோடி தேவை என, அமைச்சர் கீதாஜீவன் சேலத்தில் தெரிவித்தார்.

Update: 2021-07-05 14:45 GMT

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன்

சேலத்தில் நடைபெற்ற  எட்டு மாவட்டங்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கீதாஜீவன் கூறியாதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்த பெண்களுக்கு தற்போது திருமண உதவி வழங்கப்பட்டது.  கடந்த ஆட்சிகாலத்தில் சமூக நலத்துறை சார்பில் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்த  தொகை ரூ 3 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. 

தமிழகத்தில் அனுமதியில்லாத இல்லங்களை கண்டறிந்து அவற்றை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட இல்லத்தில் தங்கியிருந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். கொரோனா ஊரடங்கு நேரத்தில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெற்று வருவதாக வெளியான தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் 49 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளது என்று, அமைச்சர் கீதாஜீவன் காலிப்பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில்  சமூகநலத் துறை சார்பாக 135 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 11 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.  திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு 46 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்கள் வழங்கப்பட்டன.

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் வைப்புத்தொகையாக 4 பயனாளிகளுக்கு தலா 25 ஆயிரம் வீதம், ஒரு லட்சம் ரூபாயும், திருநங்கைகளுக்கு புதிய அடையாள அட்டை மற்றும் கொரோனா சிறப்பு நிவாரண நிதி 25 நபர்களுக்கு 50 ஆயிரமும் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தொற்றால், பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகள் மற்றும் தாய்,தந்தை இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகள் என 6 குழந்தைகளுக்கு மொத்தமாக 24 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சமூகநலத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News