நகருக்குள் வனம் திட்டத்தின் கீழ் மரக்கன்று நட்ட மாவட்ட ஆட்சியர்

சேலம் மாநகராட்சி பகுதியில் நகருக்குள் வனம் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மரக்கன்று நட்டார்.

Update: 2021-10-08 10:00 GMT

மரக்கன்றை நாடும் மாவட்ட ஆட்சியர். 

சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவின் அடிப்படையில் சேலம் மாநகராட்சிப் பகுதியில் நகருக்குள் வனம் உருவாக்கும் திட்டத்தின் கீழ் 1 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மரக்கன்றுகள் நடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்று  அஸ்தம்பட்டி மண்டலம் சின்னதிருப்பதி கோகுல் நகர் பகுதியில் 14000 சதுர அடி பரப்பில் 1250 மரக்கன்றுகள் நடும் விழா மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மரக்கன்று நட்டார்.

இந்நிகழ்ச்சியில் மணக்காடு காமராஜர் நகரவை மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஜெயராம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்கள். இதில் வேம்பு, பேரிச்சம், புங்கன், பூவரசு, நாவல், நெல்லி போன்ற மர வகை கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகளை பெரும் எண்ணிக்கையில் நடவேண்டும் மற்றும் அதனை நன்கு பராமரித்து பாதுகாக்க வேண்டும் என மாணவ, மாணவிகளிடம் மாவட்ட ஆட்சியர் கூறினார்.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் நகருக்குள் வனம் உருவாக்கும் திட்டத்தின் கீழ் 71 இடங்களில் 1 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 45 இடங்களில் 60,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மீதமுள்ள 40,000 மரக்கன்றுகள் விரைவில் நட்டு முடிப்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.


Tags:    

Similar News