மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-13 14:30 GMT

கோப்பு படம்

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு,  ஜூன் பன்னிரண்டாம் தேதி முதல், தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு செல்லும்வரை, 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.  கடந்த சில வாரங்களாக டெல்டா மாவட்டங்களில், நல்லமழை பெய்ததால் தண்ணீர் தேவை குறைந்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது டெல்டா மாவட்டங்களில் மழை குறைந்துள்ளதால், மீண்டும் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு இன்றுமாலை முதல், டெல்டா பாசன மாவட்டத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர்  16 ஆயிரம் கனஅடி திறக்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு தற்போது 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பாசன விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

தற்போது அணையின் நீர்மட்டம்,75.870 அடியாக உள்ளது. நீர்இருப்பு,  37.964 டி.எம்.சி ஆகவும், அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 10,566 கன அடியாக உள்ளது. இதேபோல், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக, வினாடிக்கு 750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News