கொரோனோ நிதிக்கு தங்கச்செயின் வழங்கிய மாணவியின் மனுவை ஏற்று பணி ஆணை: முதலமைச்சர் நடவடிக்கை
கொரோனோ நிதிக்கு இரண்டு பவுன் தங்கச்செயின் கொடுத்து தனக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு மனு அளித்த மாணவிக்கு பணிஆணை வழங்கி முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.;
கொரோனா நிதிக்கு 2 பவுன் செயினை வழங்கி தனக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரிய மாணவி செளமியா.
மாணவி சவுமியாவுக்கு பணி ஆணை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி
சேலம் மாவட்டம் மேட்டூர் பொட்டனேரி பகுதியைச் சேர்ந்தவர் மாணவி செளமியா. இவர், மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், கொரோனா நிதித்தொகையாக தனது கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை வழங்கி, தனக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறு நேரில் மனு வழங்கினார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக சௌமியாவின் குடும்பச்சூழ்நிலையை கருத்தில் கொண்டு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று, தனது ட்விட்டர் வாயிலாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக முதல்வர் உத்திரவிற்கிணங்க இன்று பொட்டனேரி பகுதியிலுள்ள, மாணவியின் வீட்டிற்கு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோர் நேரில் சென்று, ஜே. எஸ். டபுல்யு. நிறுவனத்தில் (JSW Company, Mecheri) பணி புரிவதற்கான பணி நியமன ஆணையினை வழங்கினர். இதையடுத்து, சௌமியாவிடம் தொலைபேசியில் பேசி தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.