சேலம் அருகே லாரி ஓட்டுநரை கத்தியால் குத்தி பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை
சேலம் அருகே லாரி ஓட்டுநரை கத்தியால் குத்தி பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.;
கத்தியால் குத்தியதில் காயமடைந்த லாரி ஓட்டுநர் பழனிவேல் முருகன்.
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பழனிவேல் முருகன். இவர் தலைவாசல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட பாலை லாரி மூலம் சேலம் ஆவின் பால் பண்ணையில் இறக்குமதி செய்து விட்டு நேற்று மாலை ஊர் திரும்பி உள்ளார்.
அப்போது இரவு அயோத்தியாபட்டிணம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி விட்டு வாகனத்திலேயே ஓய்வு எடுத்துள்ளார்.
இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பழனிவேல் முருகனை கத்தியால் குத்தி விட்டு அவர் வைத்திருந்த 20 ஆயிரம் பணத்தை பறித்து சென்றுள்ளனர். இதில் காயமடைந்த பழனிவேல் முருகன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காரிப்பட்டி காவல்நிலைய போலீசார், ஓட்டுநரை கத்தியால் குத்தி விட்டு பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.