சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் முதல் உயிரிழப்பு
சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, மாவட்டத்தில் முதலாவது இறப்பு பதிவாகி உள்ளது.;
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாரைக்கிணறு தோட்டப்பகுதியை சேர்ந்த மறைந்த புருசோத்தமனின் மகன் ராஜேஸ்வர கவுதம் (29) திருமணமாகாத இவருக்கு, தாய், தம்பி உள்ளனர். இவர் பிறவியிலேயே பார்வை குறைபாடு உள்ளவர்.
எனினும், தன்னம்பிக்கையுடன் பட்டப்படிப்பு படித்த ராஜேஸ்வர கவுதம், பாரத் ஸ்டேட் வங்கியில் பணியில் சேர்ந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தம்மம்பட்டி பாரத் ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வந்த இவர், சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் குணமாகி வீடு திரும்பினார்.
ஆனால், அதன்பிறகு கண்ணில் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்காக அவர் சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று, இறுதியாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் கருப்பு பூஞ்சை தொற்று, மூளையை தாக்கி, ஒரு பக்கம் செயலிழக்கத் தொடங்கியது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதன் மூலம், சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.