சேலம்: இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த தாய் மரணம் - நர்ஸ் மீது புகார் கூறி கலெக்டரிடம் உறவினர்கள் மனு

பச்சிளம் இரட்டை குழந்தைகளின் தாய் இறந்ததற்கு, செவிலியரே காரணம் எனக்கூறி, சேலம் கலெக்டர் அலுவலக்த்தில் கணவர், உறவினர்கள் புகார் மனு அளித்தனர்.

Update: 2021-07-02 08:15 GMT

இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் உயிரிழந்த நிலையில், அவரது கணவர், உறவினர்களுடன் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி,சுபலட்சுமி தம்பதி. இவர்களுக்கு ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இரு மாதங்களுக்கு முன்பு, சுபலட்சுமிக்கு  இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. பச்சிளம்  குழந்தைகளுடன்,சுபலட்சுமி தனது வீட்டில் இருந்துள்ளார்.
இதனிடையே, காட்டுக்கோட்டை ஆரம்ப சுகாதாரநிலைய செவிலியர் சித்ரா என்பவர், சுபலட்சுமியின் வீட்டிற்கு வந்து, கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று கூறி, கட்டாயப்படுத்தி, கடந்த 19ஆம் தேதி, சுபலட்சுமிக்கு  தடுப்பூசி போட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்பின்னர், மூச்சுத்திணறலால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, 23ஆம் தேதி  வீட்டிலேயே சுபலட்சுமி உயிரிழந்துள்ளார். இதையடுத்து கணவர் மற்றும் உறவினர்கள், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு இரண்டு பச்சிளம் பெண் குழந்தைகளுடன், இன்று மூர்த்தி வந்து, புகார் மனு அளித்தார். அதில், கொரோனா தடுப்பூசி செலுத்திய சித்ரா என்ற செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; இரண்டு பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கு அரசு உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News