வாக்கு எண்ணும் மையம்: கல்லூரிக்கு லேப்டாப் உடன் வந்த பேராசிரியர்கள்

திமுக உள்ளிட்ட கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-04-16 07:54 GMT

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு மின்னணு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் தலைமையில் 24 மணி நேர சுழற்சி முறை மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் வாக்கு பதிவு இயந்திரங்களை சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இணைய தளம் வாயிலாக பாடங்கள் நடத்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரி வந்தனர். அங்கு பாதுகாப்பில் இருந்த காவல் ஆய்வாளர் கண்ணன், விரிவுரையாளர்கள் அடையாள அட்டையை காட்டியதும் எவ்வித விசாரணையின்றி கல்லூரி வளாகத்தில் செல்ல அனுமதித்தார். இந்நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்களின் கண்காணிப்பிற்கு அங்கு செல்ல இன்று காலை வந்த திமுக உள்ளிட்ட கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் விரிவுரையாளர்களை அனுமதித்தது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சார் ஆட்சியர் சுகபுத்ரா ஆகியோர் கல்லூரி வந்து உரிய விசாரணை செய்தனர். தேர்தல் ஆணைய அதிகாரிகள், அண்ணா பல்கலை நிர்வாகத்திடம் பேசி இணைய வகுப்புகளை மாற்றிடத்தில் நடத்த அறிவுறுத்தினார். இதனையடுத்து விரிவுரையாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறினர்.

Tags:    

Similar News