உப்பூர் அனல் மின் நிலையம் இயங்குவதற்கான தடை நீக்கம்: மீனவ மக்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2021-07-03 15:29 GMT

உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதை எதிர்த்து அப்பகுதி மீனவ மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உப்பூர் அனல்மின் நிலைய திட்டத்திற்கு சுற்றுசூழல் அனுமதி பெறுவதில் முறையான விதிகளை கடைபிடிக்கவில்லை எனக்கூறி, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காளிமுத்து என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், உப்பூர் அனல் மின் நிலையம் அமைக்க வழங்கிய ஒப்புதல் முறையாக வழங்கப்படவில்லை என கூறி அனுமதியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

பசுமை தீர்ப்பாயத்தின் தடைக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த இடைக்கால தடையை நீக்குவதாக உத்தரவிட்டார்.

இதற்கு உப்பூர் மீனவ கிராம மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உப்பூர் அனல் மின் நிலையம் அமைவதால் கடலில் மீன் வளம் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், உப்பூர், மோற்பண்ணை உள்ளிட்ட சுற்றவட்டார கிராமங்களில் நடைபெற்று வரும் விவசாயம் பாதிகப்படும்.

எனவே உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிராக நீண்ட நாட்களாக அப்பகுதி மீனவ மக்கள் நடத்திய போராட்டத்தின் அடிப்படையில் பசுமை தீர்ப்பாயம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசுக்கு எதிராக பாதாகைகள் ஏந்தி சட்டையில் கருப்பு பட்டை அணிந்து அப்பகுதி மீனவ மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News