கொரோனோவால் இறந்தவர்கள் உடலை ஊருக்குள் கொண்டுவர மக்கள் எதிர்ப்பு

திருவாடானை அருகே கொரோனோவால் இறந்தவர்களின் உடலை ஊருக்குள் கொண்டு வர கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Update: 2021-05-13 11:53 GMT

இறந்தவர் உடலை இறக்கி கொண்டுவரும் காட்சி.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா மல்லிகுடி பகுதியை சேர்ந்த 46 வயதான ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவரது உடலை, சார்பு ஆய்வாளரான அவரது அண்ணன் தனது அதிகாரத்தை வைத்து, மூச்சுத்திணறலால் இருந்ததாக கூறி பிரேதத்தை அரசு அமரர் ஊர்தியில் சொந்த ஊரான மல்லிக்குடிக்கு எடுத்து வந்துள்ளார். இந்த விவரம் கிராம மக்களிடையே காட்டு தீயாக பரவியது. இரவில் முட்களை வெட்டி சாலையை அடைத்தனர். 4 மணி அளவில் அமரர் ஊர்தி வந்தபொழுது ஊரோடு ஒற்றுமையாக மறைத்து உள்ளே வர அனுமதிக்கவில்லை.

அதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறை ஆய்வாளர் பாலசிங்கம் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சமாதானத்தை மேற்கொண்டார். இருந்தும் பிரேதத்தை உள்ளே அனுமதிக்க மக்கள் முன்வரவில்லை. உடன் திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகன், துணை தாசில்தார் சேதுராமன் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரது பிரேதத்தை நேரடியாக இடுகாட்டுக்கு கொண்டு செல்வது என்றும் வீட்டில் வைக்கக் கூடாது என்று உறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள் அடக்கம் செய்ய ஒத்துக் கொண்டனர்.

அதன்படி நேராக அவரது உடல் மயானத்தில் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து கிருமிநாசினி பவுடர் போடும் ஏற்பாடுகளை செய்தார். இதனால் இங்கு பல மணி நேரம் பதட்டம் நிலவி வந்த நிலையில் உடல் அடக்கத்துககுப் பின் பதட்டம் குறைந்தது.

Tags:    

Similar News