இயற்கை எரிவாயு குழாய் கொண்டு செல்ல எதிர்ப்பு: அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இராமநாதபுரம் அருகே, இயற்கை எரிவாயு குழாய்களை, குடியிருப்பு பகுதிக்குள் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன், அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

Update: 2021-09-27 11:00 GMT

இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக்மன்சூர், வட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில் , வழுதூர் கிராம பொதுமக்களிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தை.

இராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு காட்டூர் பகுதியில் இருந்து, வழுதூர் குடியிருப்பு பகுதிக்குள் எரிவாயு குழாய் கொண்டு செல்வதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்பகுதியில் பல்வேறு அரசு மற்றும் தனியார் எரிவாயு நிறுவனங்கள் இயங்கி வருகிறது.

இதில் இருந்து கிடைக்கக்கூடிய எரிவாயு,  இராமநாதபுரம் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய பகுதிகளுக்கு பெட்ரோல் நிலையத்திற்கு, குழாய் மூலம் கொண்டு செல்லும் திட்டத்தை தனியார் நிறுவனம் செயல்படுத்த உள்ளது. இதை வழுதூர் கிராம பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.

இது தொடர்பாக, இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக்மன்சூர், வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் வழுதூர் கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில்,  பொதுமக்களின் நியாயமான கோரிக்கையை அரசு அதிகாரிகள் ஏற்று திட்டத்தை மாற்றுப் பாதையில் கொண்டுசெல்ல பரிசீலனை செய்ய அரசு அதிகாரிகள் தனியார் நிறுவனத்திற்கு அறிவுறுத்தி உள்ளனர்.

இந்தத் திட்டத்தால்,  ஏற்கனவே பலமுறை கேஸ் லீக் ஏற்பட்டு பல நாட்கள் பனை மரங்களில் தீ பற்றி எரிந்த சம்பவங்கள் நடைபெற்றதால்,  அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை, வாழ்வாதாரம் பாதிக்கும். ஆகையால், ஏற்கனவே போடப்பட்ட பாதையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News