குடும்ப பிரச்சினையில் தாயும் மகனும் எடுத்த அவசர முடிவு

குடும்பத்தில் பிரச்னை காரணமாக மனமுடைந்த பேரையூரை சேர்ந்த தாயும், மகனும் தொண்டி அருகே விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டனர்.

Update: 2021-09-13 07:40 GMT

தொண்டி கிழக்கு கடற்கரை சாலை அருகேயுள்ள காட்டுப் பகுதியில் பெண் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தொண்டி காவல் ஆய்வாளர், காவல் துறையினருடன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதனருகில் மற்றொரு ஆண் கிடப்பதைக் கண்டு அருகே சென்று பார்க்கையில், அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டனர். உடனடியாக அவரை மீட்ட காவல் துறையினர் அவசர ஊர்தி மூலம் தொண்டி அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதித்தனர்.

காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா, வையூர் கிழக்கு தெருவைச் சேர்ந்த சின்ன முனியாண்டி மனைவி மாரியம்மா (60) என்பதும் சிகிச்சை பெற்றுவருபவர் அவரது மகன் பாக்கியராஜ் (40) என்பதும் தெரியவந்தது. பாக்கியராஜின் தம்பி மனைவி தவறான நடத்தையில் ஈடுபட்டு வருவதை இருவரும் கண்டித்ததால், தம்பி மனைவி, தனது கணவரிடம் மாட்டி கொள்ளாமல் இருக்க, கணவரிடம், பாக்கியராஜ் தன்னை தகாத உறவுக்கு அழைக்கிறார் என பழி சுமத்தியுள்ளார்.

இதன் காரணமாக குடும்பத்திற்குள் தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டது. இதனால் அவமானப்பட்ட மாரியம்மாவும், அவரது மகன் பாக்கியராஜும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள காட்டுப் பகுதியில் நேற்றிரவு கடிதம் எழுதி வைத்து விட்டு விஷமருந்தியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே மாரியம்மா இறந்துள்ளார். உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த பாக்கியராஜும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இருவரின் உடல்களை உடற்கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தொண்டி காவல்துறையினர், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News