அரசு நேர்முகத் தேர்வுக்கு சென்ற பட்டதாரி இளைஞர் மர்மமான முறையில் மரணம்

ஆர்.எஸ் மங்கலம் அருகே வயல் காட்டுப்பகுதியில் அரசு நேர்முகத் தேர்வுக்கு சென்ற பட்டதாரி மர்மமான முறையில் மரணம்

Update: 2022-04-28 17:15 GMT

 திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே காட்டுப்பகுதியில் இறந்து கிடந்த  இளைஞர் தொடர்பாக விசாரிக்கும் போலீஸார்

ஆர்.எஸ் மங்கலம் அருகே வயல் காட்டுப்பகுதியில் அரசு நேர்முகத் தேர்வுக்கு சென்ற பட்டதாரி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட காவணக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயபிரபாகரன். பட்டதாரியான இவர் அரசு கால்நடை மருத்துவமனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் பணியில் சேர நேர்முகத் தேர்விற்கு கடிதம் வந்துள்ளது. இதனால் நேற்று காலை தனது இருசக்கர வாகனத்தில் நேர்முகத்தேர்வுக்கு ராமநாதபுரம் செல்வதாக கூறி சென்றவர் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் குழப்பமடைந்த அவரது குடும்பத்தினர் அவரை எங்கெங்கிலும் தேடி வந்தநிலையில் இன்று காலை திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே அவரது இருசக்கர வாகனம் நிற்பதைக் கண்டு அருகே உள்ள வயல் காட்டுப்பகுதியில் சென்று தேடியபோது அவர் அங்கு மர்மமான முறையில் இறந்து சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திக்கு வந்த  ஆர்.எஸ். மங்கலம் காவல் ஆய்வாளர் தேவி, சார்பு ஆய்வாளர் பால்சாமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விஜயபிரபாகரன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் சாவி அவரது பேண்ட் பாக்கெட்டிலும் செல்போன் மற்றும் அவரது பை உடல் அருகிலும் இருந்தன. இதையடுத்து சடலத்தை கைப்பற்றி உடற்கூய்விற்காக திருவாடனை அரசு தாலுகா மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் பட்டதாரி மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு நேர்முக தேர்வுக்கு சென்ற பட்டதாரி வயல் காட்டுப்பகுதியில் மர்மமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
Tags:    

Similar News