பாசிப்பட்டிணம் கடற்கரையில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் காட்சி
பாசிப்பட்டிணம் கடற்கரையில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் காட்சியை மீனவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே பாசிப்பட்டினம் கடற்கரை பகுதியில் நேற்று கனமழை பெய்தது. மழை பெய்வதற்கு முன்பாக கடற்கரையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மேகம் தாழ்வாக இறங்கி மிகப்பெரிய சுழல் காற்று ஏற்பட்டு, கடலில் இருந்த தண்ணீரை வெகுவாக உறிஞ்சும் காட்சி அரங்கேறியது. அந்த காற்று கரையை நோக்கி நகர்வது போல தெரிந்தது. அதனை கண்ட பாசிப்பட்டினம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், அவரது படகுகளும் சேதமடைந்துவிடும் என்ற அச்சத்தால் படகுகளை விரைவாக பத்திரப்படுத்தினர். மேலும் மழை பெய்வதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பாக கருமேகம் உருவாகி கடல் நீரை மேகம் உறிஞ்சும் நிகழ்வு நடந்தது இதுதான் முதல் முறை என்றும், இதனைத் தொடர்ந்து சுழல்காற்று உருவாகி கரையை நோக்கி வந்து மீன் பிடிக்கும் வலைகளை நாசமாக்கியது. இதுபோன்ற அரிய நிகழ்வுகள் வெளிநாடுகளில் ஏற்படுவதை தொலைக்காட்சிகளில் பார்த்துள்ளதாகவும், இப்பகுதியில் இதுவே முதல்முறையான நிகழ்வு என்றும், இதனால் ஆச்சரியமும் அடைந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.