உதகையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் 2 நாள் மாநாடு துவங்கியது

உதகை ஆளுநர் மாளிகையில் பல்கலைக் கழக துணை வேந்தர்களின் 2 நாள் மாநாட்டை ஆளுநர் என்.ஆர். ரவி இன்று துவக்கி வைத்தார்.

Update: 2022-04-25 11:03 GMT
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை துவக்கி வைத்தார் ஆளுனர் ரவி.

உதகை ஆளுநர் மாளிகையில் தமிழகத்திலுள்ள பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களின் இரண்டு நாள் கருத்தரங்கை ஆளுநர் என்.ஆர்.ரவி இன்று துவக்கி வைத்தார். இதில், புதிய உலகின் கட்டமைப்பில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் 2047 ஆம் ஆண்டிற்குள் உலக நாடுகளை வழி நடத்தும் நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெறுகிறது.

இந்த 2 நாள் கருத்தரங்கில் பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் பேராசிரியர் ஜெகதீஷ்குமார் மற்றும் ஜோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பின்னர் தமிழக ஆளுநர் ரவி சிறப்புரையாற்றிய போது 2042க்குள் இந்தியா உலக அளவில் தலைவராக விளங்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடு அனைத்து துறைகளிலும் பரிணாம வளர்ச்சி அடைந்து வருவதாகவும், இதன் காரணமாக இந்தியா உலக நாடுகளை வழிநடத்தும் அளவிற்கு மாற்றம் ஏற்பட்டு வருவதாக கூறினார்.

மேலும் அனைத்து தரப்பு மக்களின் ஒட்டு மொத்த வளர்ச்சி மூலமாகவே நாடு வளர்ச்சி அடையமுடியும் என்பதை கருத்தில் கொண்டு சப்கா சாத் சப்கா விகாஸ் என்ற அடிப்படைடயில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். அனைத்து தரப்பு மக்களின் அடிப்படை தேவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கடந்த 3 ஆண்டுகளில் 800 பில்லியன் மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். எந்த ஒரு மனிதனும் நோயினால் உயிரிழக்ககூடாது என்ற நோக்கில் 5 லட்ச ரூபாய் வரை காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருதோடு, நலவாழ்வு மையங்கள் மூலம் உயர் தர சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறினார்.

மேலும் ஜன் ஹவுஷாதி மருந்தகங்கள் ஏற்படுத்தப்பட்டு மருந்துகள் 10 ல் ஒரு பங்களவு குறைந்த விலையில் விற்கப்பட்டு வருவதாக கூறினார். இந்த இரண்டு நாள் மாநாட்டில் தமிழகத்திலுள்ள 31 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். ஆளுநரின் முதன்மை செயலர் ஆனந்த்ராவ் விக்கி பட்டீல், பல்கலைக்கழக மான்ய குழு தலைவர் பேராசிரியர் ஜெகதீஸ்குமார் உட்பட பலர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இதனால் உதகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Tags:    

Similar News