சானிடைசர் அருகில் வைத்து பட்டாசு வெடிக்காதிங்க: போலீசார் அட்வைஸ்

பட்டாசுகளை வெடிக்கும் போது கிருமிநாசினி போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அருகில் வைக்க வேண்டாம் என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Update: 2021-11-03 09:31 GMT

கோப்பு படம்

இது தொடர்பாக, நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி அன்று பட்டாசுகளை மிகவும் கவனத்துடன் வெடிக்க வேண்டும். பட்டாசுகளை வெடிக்கும்போது கிருமிநாசினி போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அருகில் வைக்க வேண்டாம்.

நைலான், பட்டு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணிந்து பட்டாசு அருகில் செல்வதை தவிர்க்கவும். பட்டாசுகளை வெடிக்கும் போது மண், தண்ணீர் போன்ற உபகரணங்களை அருகில் வைப்பது நல்லது. பட்டாசு வெடிப்பதில் கவனக்குறைவு கூடாது. மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் மிகுந்த கவனத்துடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது கண்டிப்பாக பெரியவர்கள் அருகில் இருக்க வேண்டும். மேலும் மருத்துவமனை, முதியோர் இல்லம், பறவைகள் அதிகம் கூட கூடிய இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பெட்ரோல் விற்பனை நிலையம், சமையல் எரிவாயு சிலிண்டர் குடோன், கூரைவீடு, பிரதான சாலைகளில் பட்டாசு வெடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி,  காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டும் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை எந்தவித அசம்பாவிதமும் இன்றி கொண்டாட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News