நீலகிரி சேவாகேந்திரம் சார்பில் 5000 பேருக்கு நிவாரணப்பொருட்கள்
உதகையில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வை ஆட்சியர் தலைமையில் சேவாகேந்திர நிர்வாகிகள் வழங்கினர்.;
உதகையில் சேவா பாரதி மற்றும் நீலகிரி சேவா கேந்திரம் சார்பில் 1500 மதிப்புள்ள மளிகை தொகுப்பு 5 ஆயிரம் பேருக்கு கொரோனா நிவாரணப் பொருள் வழங்கும் நிகழ்வு உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கொரோனா தொற்றால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்கு சேவா கேந்திரம் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் சேவா கேந்திரம் சார்பில் ஒரு கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் முன்னிலையில் துவக்கப்பட்டது.
ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் காய்கறிகள், எதிர்ப்பு சக்தி மிக்க ஆர்சனிக் மாத்திரைகள் முதற்கட்டமாக முடிதிருத்தும் 150 தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சேவா கேந்திரா நிர்வாகிகள்,
கொரோனா பாதிப்பால் தனிமைப் படுத்தப்பட்டு உள்ள பகுதிகளுக்கு பத்து நாட்களில் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள், 4 லட்சம் பேருக்கு ஆர்சனிக் ஆல்பம் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள், 1500 மதிப்புள்ள மளிகை தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினர். வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்கள் தகவல் கொடுத்தால் அவர்களுக்குத் தேவையான நிவாரண பொருட்கள் சேவா பாரதி,நீலகிரி சேவா கேந்திரா மூலம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.