உதகை பள்ளியில் மாணவிகளுக்கு கொரோனா: பள்ளி மூடல்

ஒரே பள்ளியில் பயிலும் 7 மாணவிகளுக்கு தொற்று பாதித்ததால் பெற்றோர்கள் இடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-10-20 10:08 GMT

பள்ளியை தூய்மைபடுத்தும் பணியாளர்கள். 

உதகை தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட சில பள்ளிகளில் கடந்த 18-ந் தேதி சுகாதார குழுவினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மாணவர்கள் உள்பட மொத்தம் 530 பேரிடம் மாதிரி சேகரித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவு நேற்று வந்தது. அதில் உதகை தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9, 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக அவர்கள் பள்ளியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து சுகாதார குழுவினர் நேற்று பள்ளியில் முகாமிட்டு மாணவிகள், ஆசிரியர்கள் என 300 பேரிடம் இருந்து மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

கொரோனா பரவலை தடுக்க தனியார் பள்ளி மூடப்பட்டு உள்ளது. மறு உத்தரவு வரும் வரை பள்ளியை திறக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. உதகை நகராட்சி ஊழியர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து பள்ளி வகுப்பறைகள், வளாகம் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர். ஒரே பள்ளியில் பயிலும் 7 மாணவிகளுக்கு தொற்று பாதித்ததால் பெற்றோர்கள் இடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது.

Tags:    

Similar News