நீலகிரியில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி சாதனை: கலெக்டர் தகவல்

நீலகிரியில் 18 வயதுக்கு மேல் தகுதியான அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-13 12:08 GMT

பைல் படம்.

இதுகுறித்து நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 7 லட்சத்து 23 ஆயிரத்து 396 பேர். இதில் 18 வயதுக்கு மேல் 5 லட்சத்து 21 ஆயிரம் பேர் உள்ளனர்.

மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டம் முழுவதும் 29 ஆயிரத்து 758 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 13 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதைவிட அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

நீலகிரியில் முதல் டோஸ் 5 லட்சத்து 14 ஆயிரத்து 783 பேருக்கு போடப்பட்டது. 18 வயதுக்கு மேல் தகுதி வாய்ந்த அனைவருக்கும் 100 சதவீதம் செலுத்தி இலக்கு எட்டப்பட்டது.

6,277 பேர் கொரோனா பாதித்து உள்ளதால், 3 மாதங்களுக்குப் பின்னர் தடுப்பூசி செலுத்தப்படும். மேலும் 2-வது டோஸ் அனைவருக்கும் வருகிற 3 மாதங்களுக்குள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக அரசு அதிக தடுப்பூசிகளை நீலகிரிக்கு ஒதுக்கியதால் இந்த இலக்கை எட்ட முடிந்தது. இந்த பணியில் ஈடுபட்ட சுகாதார பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறினார்.

Tags:    

Similar News